- Home
- Tamil Nadu News
- சாத்தான்குளத்தில் 2 பேர் உயிரிழந்தபோது நீதி எங்கே போனது இபிஎஸ்? கூவத்தூருக்கா! ஆர்.எஸ்.பாரதி சரவெடி!
சாத்தான்குளத்தில் 2 பேர் உயிரிழந்தபோது நீதி எங்கே போனது இபிஎஸ்? கூவத்தூருக்கா! ஆர்.எஸ்.பாரதி சரவெடி!
திருப்புவனம் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்ததற்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். சாத்தான்குளம், தூத்துக்குடி சம்பவங்களைச் சுட்டிக்காட்டி எடப்பாடியின் அலட்சியப் போக்கை விமர்சித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
மனித மிருகங்களால் கொல்லப்பட்ட மடப்புரம் அஜித்குமாரின் தாயாரிடமும், தம்பியிடமும் தொலைபேசி வாயிலாகப் பேசினேன்; என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவித்தேன். தம்பி அஜித்குமார் கொலைக்கான நீதியைப் பெற்றுத் தர நிச்சயம் அதிமுக துணை நிற்கும் என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை டிவியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் எனவும் ஆணவத்தோடும், அலட்சிய மனப்பான்மையோடும் பேசியவர் தானே நீங்கள்? என எடப்பாடி பழனிசாமியை ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி
இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்: திருப்புவனம் கொடூரம் பற்றிய தகவல் வந்ததுமே, குற்றம்சாட்டப்பட்ட 6 காவலர்கள் உடனடியாகச் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்; விரைந்து கைதும் செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் முதலமைச்சர் அவர்கள், தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதோடு, இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, நியாயம் கிடைத்திட வழிவகை செய்யப்படும் என உறுதியளித்துள்ளார். வழக்கும் உடனடியாக சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின்
அதுமட்டுமின்றி, திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசுப் பணி வழங்கியதோடு மட்டுமின்றி அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற இரண்டே நாட்களில் சட்ட ரீதியான இத்தனை நடவடிக்கைகள் எடுப்பதும் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் நிகழாதவை; இன்று அதை நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார் முதலமைச்சர்.
சாத்தான்குளம் சம்பவம்
உங்கள் இருண்டகால ஆட்சியில் நடைபெற்ற சாத்தான்குளம் சம்பவத்தில் ஜெயராஜ் - பென்னீக்ஸ் இருவருமே உடல்நலக்குறைவால் இறந்தார்கள் என்றும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை டிவியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் எனவும் ஆணவத்தோடும், அலட்சிய மனப்பான்மையோடும் பேசியவர் தானே நீங்கள்? அப்போது நீதி எங்கே போனது? கூவத்தூருக்கா? கொஞ்சமேனும் உங்களுக்கு மனசாட்சி இல்லையா? உங்களின் கண்துடைப்பு நாடகங்களை யாரும் நம்பமாட்டார்கள்; இனியாவது நிறுத்திக் கொள்ளலாம்; நீதியை நிலைநாட்ட முதலமைச்சர் இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.