- Home
- Tamil Nadu News
- மக்களே வாய்ப்பை தவறவிட்டுடாதீங்க.. ரொம்ப கம்மி வட்டியில் ரூ.10 லட்சம் வரை கடன்.! அள்ளி கொடுக்கும் தமிழக அரசு!
மக்களே வாய்ப்பை தவறவிட்டுடாதீங்க.. ரொம்ப கம்மி வட்டியில் ரூ.10 லட்சம் வரை கடன்.! அள்ளி கொடுக்கும் தமிழக அரசு!
சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (TAMCO) கீழ் விராசாத் என்ற கைவினை கலைஞர் கடன் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தகுதியுள்ள சிறுபான்மையின கைவினைக் கலைஞர்களுக்கு தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை குறைந்த வட்டியில் கடன்.

தமிழக அரசு கடன் உதவி
தமிழக அரசு சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மக்கள் முன்னேற்றத்திற்காக சொந்த தொழில் செய்யவும், கல்விக்காகவும் பல்வேறு துறையின் கீழ் கடன் உதவி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பல லட்சம் ரூபாய் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. அந்த வகையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கடன் உதவி தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கைவினைக் கலைஞர்கள்
இதுதொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (TAMCO) கீழ் விராசாத் கைவினைக் கலைஞர் கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தையல் தொழில், பாய்முடைதல், கூடை பின்னுதல், தறி நெய்தல், ஆரி ஓர்க், எம்பிராய்டரி கைவினைப் பொருட்கள் செய்தல், மரச்சாமான்கள் செய்தல் மற்றும் இதர கைவினைத் தொழில்கள் மேற்கொள்ளும் சிறுபான்மையின கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.
கடன் தொகை ரூ.10 லட்சம்
திட்டம்-1-ன் கீழ் பயன்பெற விரும்பும் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் சிறுபான்மையினக் கைவினைக் கலைஞர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்களுக்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.10 லட்சம் வழங்கப்படும். மேலும் இத்திட்டத்தின் கீழ் ஆண் பயனாளிகளுக்கு 5 சதவீதம் மற்றும் பெண் பயனாளிகளுக்கு 4 சதவீதம் ஆண்டு வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படும்.
பெண் பயனாளிகளுக்கு 5 சதவீதம் ஆண்டு வட்டி
திட்டம்-2-ன் கீழ் பயன்பெற நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் சிறுபான்மையினக் கைவினைக் கலைஞர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்களுக்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.10 லட்சம் வழங்கப்படும். மேலும் ஆண் பயனாளிகளுக்கு 6 சதவீதம் மற்றும் பெண் பயனாளிகளுக்கு 5 சதவீதம் ஆண்டு வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படும். மேற்சொன்ன திட்டம்-1 மற்றும் திட்டம்-2-ன் கீழ் பெறப்படும் கடனை 5 ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்த வேண்டும்.
இணையதள முகவரி
எனவே திருநெல்வேலி மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் போன்ற விராசாத் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்கள் மேற்சொன்ன கைவினைக் கலைஞர் கடன் திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் விண்ணப்பங்களை https://tamco.tn.gov.in/ என்ற இணையதள முகவரி அல்லது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரில் அணுகி பெற்று கொள்ளலாம். மேற்சொன்ன திட்டத்தின் கீழ் அதிக அளவில் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

