- Home
- Tamil Nadu News
- எடப்பாடி தலையில் இடியை இறக்கும் அதிருப்தியாளர்கள்.. ஓரணியில் டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன்
எடப்பாடி தலையில் இடியை இறக்கும் அதிருப்தியாளர்கள்.. ஓரணியில் டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன்
சென்னையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை அதிமுக முன்னாள் நிர்வாகிகளான ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

TTV தினகரனுடன் 1 மணிநேரம் ஆலோசித்த அண்ணாமலை
ஆதரவாளர்களை சந்தித்துவிட்டு சென்னையில் தங்கியுள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக மூத்த நிர்வாகி செங்கோட்டையன் உள்ளிட்டோர் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக கடந்த ஞாயிற்றுக் கிழமை டிடிவி தினகரனை பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை சந்தித்து சுமார் 1 மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டார்.
மீண்டும் NDAவில் டிடிவி தினகரன்..?
கூட்டணியில் இருந்து விலகிய நிலையிலும், டிடிவி தினகரனை, அண்ணாமலை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த சந்திப்பின் போது, மீண்டும் கூட்டணிக்குள் வருமாறு தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்ற வாசகத்தை சுட்டிக்காட்டி தினகரன் மீண்டும் கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளதாக அண்ணாமலை நம்பிக்கைத் தெரிவித்தார்.
எடப்பாடியை ஏற்க முயாது.. தினகரன் திட்டவட்டம்
ஆனால், தனது நிலைப்பாட்டில் துளியும் மாறாத தினகரன், எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் அமமுக இடம் பெறாது. அண்ணாமலை எனது நெருங்கிய நண்பர். அவருடன் நல்ல நட்பு தொடர்கிறது. ஆனால் அரசியல் வேறு, நட்பு வேறு. எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
அதிமுக.வுக்கு மீண்டும் பாதிப்பு..?
இதனிடையே கூட்டணிக்குள் உரிய மரியாதை இல்லை என்பதை சுட்டிக்காட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக.வில் கலகக்குரல் எழுப்பிய செங்கோட்டையன் ஆகியோர் சென்னையில் தங்கியுள்ள டிடிவி தினகரனை தனித்தனியே சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மூவரும் ஓரணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் பட்சத்தில் 2021ம் ஆண்டைப் போலவே மீண்டும் அதிமுக.வின் வெற்றியை வெகுவாக பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது.