- Home
- Tamil Nadu News
- Annamalai: புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? பின்னணியில் 'செம' மாஸ்டர் பிளான்! தவெக 2.0 வெயிட்டிங்!
Annamalai: புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? பின்னணியில் 'செம' மாஸ்டர் பிளான்! தவெக 2.0 வெயிட்டிங்!
Annamalai: தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

தமிழக பாஜக முகமாக இருந்த அண்ணாமலை
தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை. சுமார் 3 ஆண்டுகளாக பாஜகவின் மாநில தலைவராக பதவி வகித்த இவர் தமிழ்நாட்டில் பாஜக மூலை மூடுக்கிலும் வளர்வதற்கு பெரும் பங்கு வகித்தார். தமிழகத்தில் பாஜக இந்த அளவுக்கு தெரிகிறது என்றால் அதற்கு அண்ணாமலை தான் முதன்மையான காரணம் என்றால் அது மிகையாகாது. இளைஞர்களிடம் பாஜகவை வளர்த்த அண்ணாமலை சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக மாநில தலைவர் பதவியில் இருந்து தூக்கி வீசப்பட்டார். நயினார் நாகேந்திரன் தலைவராக நியமிக்கப்பட்டார்.
முதன்முறையாக மத்திய அரசுக்கு எதிர்ப்பு
அதன்பின்பு சட்டப்பேரவை தேர்தலிலும் போட்டியிட மறுத்து விட்ட அண்ணாமலை, பாஜக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்தார். அவர் பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்படுக்கிறது. இதனை பறைசாற்றும்விதமாக சமீபத்தில் சிபிஎஸ்இ (CBSE) ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்த "மும்மொழி கொள்கை" திட்டத்திற்கு அண்ணாமலை தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார். இவ்வளவு சீக்கிரம் மும்மொழி கொள்கையை கொண்டு வருவது தமிழக மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தேவையற்ற மன அழுத்தத்தை உருவாக்கும் என்று அவர் வெளிப்படையாகக் கூறினார்.
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை
மத்திய பாஜக தலைமைக்கு எதிராக அவர் குரல் எழுப்பியது இதுவே முதல் முறை என்பதால் மேலிடம் மீது அண்ணாமலை அதிருப்தியில் இருப்பது உறுதியானது. இந்த நிலையில், அண்ணாமலை புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. அதாவது மக்கள் சக்தி இயக்கம் என்ற பெயரிலோ அல்லது அதற்கு இணையான ஒரு பெயரிலோ புதிய கட்சியை அண்ணாமலை விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அவர் முதலில் ஒரு இயக்கத்தை ஆரம்பித்து அதன்பிறகே அதனை கட்சியாக மாற்றுவார் என தகவல்கள் கசிந்துள்ளன. அண்ணாமலைக்கு ஓரளவு இளைஞர்கள் ஆதரவு இருப்பதால் தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் அவர் இந்த முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அதிமுகவுடன் மோதல்; பாஜக தலைமையின் பிடிவாதம்
பாஜகவில் பெரும் செல்வாக்குடன் வலம் வந்த அண்ணாமலை, பிரதமர் மோடி மீது மிகுந்த மரியாதை கொண்ட அண்ணாமலை புதிய கட்சி தொடங்க வேண்டிய நோக்கம் என்ன? என நீங்கள் கேட்கலாம். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாகவே அதிமுகவுடன் கூட்டணி வைக்க அண்னாமலைக்கு துளியும் விருப்பம் இல்லை. பாஜகவுக்கு தமிழகத்தில் குறிப்பிட்ட வாக்கு வங்கி உள்ளது. தனித்தே களம் காண்போம் என்று அவர் தொடர்ந்து கூறி வந்தார். இதை ஏற்றுக்கொள்ளாத பாஜக மேலிடம் அதிமுகவுடன் கூட்டணி என்பதில் உறுதியாக இருந்தது.
மாநில தலைவர் பதவியை பறித்த பாஜக தலைமை
மேலும் அதிமுக தலைவர்களுக்கும், அண்ணாமலைக்கும் சுத்தமாக ஒத்துப்போகவில்லை. ஜெயலிதா, அண்ணா குறித்து அண்ணாமலை கடுமையான விமர்சனம் வைத்தற்கு இபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் அண்ணாமலை மாநில தலைவராக இருந்தால் கூட்டணிக்கு வர முடியாது என இபிஎஸ் கூறியதால் அண்ணாமலையின் பதவியை பறித்தது பாஜக தலைமை. இதனால் மேலும் விரக்தியான அண்ணாமலை கட்சி பணிகளில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியே இருந்து வந்தார்.
தேர்தலில் கேட்ட தொகுதியும் கிடைக்கவில்லை
மறுபக்கம் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அண்ணாமலை ஆதரவாளர்களை கட்சியில் இருந்து ஓரங்கட்டினார். இதுவும் அவருக்கு கூடுதல் விரக்தியை உண்டாக்கியது. இதன்பிறகு சட்டப்பேரவை பணிகள் தொடங்கிய நிலையில், அண்ணாமலை கேட்ட தொகுதியை பாஜக தலைமை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த அண்ணாமலை தேர்தலில் போட்டியிடவில்லை என அதிரடியாக அறிவித்தார். பின்பு தேர்தலில் பாஜக மட்டுமின்றி அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் படுதோல்வி அடைந்தன. பாஜக ஒரே ஒரு தொகுதியில் மட்டும் போராடி வென்றது.
தவெகவுடன் கூட்டணி செல்வாரா?
தமிழகத்தில் இளைஞர்களிடம் பாஜகவை அண்ணாமலை கொண்டு சேர்த்த நிலையில், பாஜக மேலிடம் அதிமுகவுடன் கூட்டணி வைத்து இதை பாழக்கியதாக அவர் நினைக்கிறார். இதற்கு மேலும் தமிழகத்தில் பாஜகவுக்கு செல்வாக்கு அதிகரிக்காது என்பதை புரிந்து கொண்ட அண்ணாமலை கடைசியாக தனிக்கட்சி தொடங்கும் முடிவை எடுத்திருப்பதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். புதிய கட்சி தொடங்கி ஆளும் கட்சியான விஜய்யின் தவெகவுடன் அவர் வருங்காலத்தில் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாகவும் அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

