- Home
- Tamil Nadu News
- தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு.! மீனவர்களே உஷார்.! சூறாவளிக்காற்று வீசும்.! வானிலை மையம் அலர்ட்
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு.! மீனவர்களே உஷார்.! சூறாவளிக்காற்று வீசும்.! வானிலை மையம் அலர்ட்
வடகிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழகத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த வாரத்தில் தென்தமிழகம், டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது கடும் பனிபொழிவு நிலவி வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் எந்த பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வறண்ட வானிலை நிலவக்கூடும்
அதாவது கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவித்துள்ளது.`
லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
மேலும் வருகிற 14ம் தேதி தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், 15ம் தேதி கடலோர தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும் டிசம்பர் 16, 17 மற்றும் 18ம் தேதிகளில் கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை நிலவரம்
வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு
இன்று முதல் நாளை மறுநாள் 14 வரை தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை முன்னறிவிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்று முதல் 15ம் தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

