- Home
- Tamil Nadu News
- Chitra Pournami: பர்வதமலை சித்ரா பௌர்ணமி.. யாருக்கெல்லாம் அனுமதி இல்லை? காலை 5 முதல் மாலை 3 மணி வரை! 7 முக்கிய கட்டுப்பாடுகள்
Chitra Pournami: பர்வதமலை சித்ரா பௌர்ணமி.. யாருக்கெல்லாம் அனுமதி இல்லை? காலை 5 முதல் மாலை 3 மணி வரை! 7 முக்கிய கட்டுப்பாடுகள்
திருவண்ணாமலை பர்வதமலையில் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் மலையேறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 18 முதல் 60 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமான பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதி.

புகழ்பெற்ற பர்வத மலை
புகழ்பெற்ற பர்வத மலை (Parvathamalai) என்பது தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான ஆன்மீக மற்றும் மலையேற்ற (Trekking) தலமாகும். இது சுமார் 4,560 அடி உயரமும், 5,500 ஏக்கர் பரப்பளவும் கொண்ட, ஆகாய உச்சியில் கோயில் கொண்டுள்ள சித்தர் மலை என போற்றப்படுகிறது. இந்த மலை, பல அதிசயங்களையும் மர்மங்களையும் உள்ளடக்கியது. இங்குள்ள சிவலிங்கத்தை பக்தர்களே நேரடியாகத் தொட்டு பூஜிக்கும் வசதி உள்ளது. சித்தர்கள் இன்றும் சூட்சும வடிவில் இங்கு வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது. இதனால் இம்மலை 'தென்கயிலாயம்' என்றும் அழைக்கப்படுகிறது.
பெளர்ணமி கிரிவலம்
இந்நிலையில் திருவண்ணாமலை கிரிவலம் செல்வதை போன்று பர்வதமலையிலும் ஒவ்வொரு மாதமும் வரும் பெளர்ணமி விஷேசமாக இருக்கும். அதுவும் சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பெளர்ணமி இன்னும் கூடுதல் சிறப்பு உடையது. அதனால், அந்த பெளர்ணமியில் கிரிவலம் செல்வதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்தாண்டு சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு பர்வதமலை ஏறும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்
* சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் காலை 5 மணி முதல் 3 மணி வரை பர்வதமலைக்கு செல்ல அனுமதி.
* நுரையீரல் பாதிப்பு, சுவாசப் பிரச்னை, இதயநோயாளிகள் உள்ளிட்டோர் மலையேற முயற்சிக்க வேண்டாம்.
* 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் மட்டும் மலையேற அனுமதி.
வெப்ப அலை
* கர்ப்பிணிகள், நடக்க இயலாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனுமதி மறுப்பு
* பர்வதமலை அடிவாரம், மலையேறும் வழிகளில் சுழற்சி முறையில் வனத்துறை, காவல்துறை, தீயணைப்புத் துறையினர் பணியில் ஈடுபட வேண்டும்.
* தமிழ்நாட்டில் நிலவும் வெப்ப அலை காரணமாக உடல் உபாதைகள் உள்ளவர்கள் மலையேறுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
* பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகளையும் அரசு அதிகாரிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

