- Home
- Tamil Nadu News
- இனி சென்னைக்குள் பேருந்து வராது.! தென் மாவட்ட பயணிகளுக்கு போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு
இனி சென்னைக்குள் பேருந்து வராது.! தென் மாவட்ட பயணிகளுக்கு போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு
சென்னையில் கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தாம்பரம் வரை இயக்கப்பட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முக்கிய மையமாக உள்ளது. அதன் படி வட மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அதே நேரம் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களாக மதுரை, திருச்சி, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படுகிறது.
கிளாம்பாகத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்
இந்த நிலையில் வெளியூரில் இருந்து சென்னை வரும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படுகிறது. அங்கிருந்து சென்னைக்குள் வருவது மிகவும் சிரமமாக நிலையாக உள்ளது. குறிப்பாக மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் மின்சார ரயில் சேவையும் இல்லாத காரணத்தால் பயணிகள் பாதிப்படைந்தனர். இதனையடுத்து தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்தது.
இதனால் தாம்பரத்தில் இருந்து மின்சார ரயில் அல்லது மாற்று பேருந்து மூலம் மற்ற இடங்களுக்கு சென்றனர். தற்போது தாம்பரம் வரை பேருந்துகள் இயக்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது இதனை கருத்தில் கொண்டு நாளை முதல் தாம்பரம் வரை பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் வரை இயக்கப்படாது
இது தொடர்பாக போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம் மாநகர போக்குவரத்துக் காவல் துறை வழங்கியுள்ள பரிந்துரையின்படி தமிழகத்தின் தென்மாவட்டங்களிலிருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் அனைத்தும் 04.03.2025 செவ்வாய்கிழமை முதல் சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரை இயக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்
எனவே கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலுருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதி மா.போ. கழகத்தில் தற்போது 80 வழித்தடங்களில் 589 பேருந்துகள் 3795 பயணநடைகள் இயக்கப்பட்டு வருவதுடன் கூடுதலாக 104 பேருந்துகள் 816 பயணநடைகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் மாநகர போக்குவரத்து சேவையை பயன்படுத்திக்கொள்ள கேட்டுகொள்ளப்படுவதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.