அடுத்தடுத்து தொடர் விடுமுறை.! போக்குவரத்து துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு வெளியூர் பயணம் செய்வோரின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னை, கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட இடங்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கூட்ட நெரிசலைத் தவிர்க்க முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து தொடர் விடுமுறை.! போக்குவரத்து துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
சொந்த ஊரில் வேலை கிடைக்காத காரணத்தால் வெளியூர்களுக்கு வேலை தேடி நாள் தோறும் லட்சக்கணக்கான மக்கள் செல்கின்றனர். மேலும் படிப்பிற்காகவும் வெளியூர்களுக்கு பயணிக்கின்றனர். எனவே வெளியூருக்கு சென்றவர்கள் விஷேச நாட்கள், தொடர் விடுமுறை நாட்கள், வார விடுமுறை நாட்களுக்கு மட்டுமே சொந்த ஊருக்கு செல்வார்கள். அந்த வகையில் வெளியூர் செல்லும் பயணிகளுக்காக சிறப்பு ரயில், சிறப்பு பேருந்து இயக்கப்படும். அதன் படி கடந்த வாரம் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்தது. குறிப்பாக சனி, ஞாயிறு விடுமுறையோடு சேர்த்து தைப்பூசம் விடுமுறை கிடைத்ததால் சொந்த ஊருக்கு பயணம் செய்தனர்.
சனி ஞாயிறு விடுமுறை
இந்த நிலையில் மீண்டும் இரண்டு நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளதால் பொதுமக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனையடுத்து சிறப்பு பேருந்து தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள தகவலில், வருகிற 14/02/2025 (வெள்ளிக்கிழமை) 15/02/2025 (சனிக்கிழமை) 16/02/2025 (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 14/02/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 245 பேருந்துகளும், 15/02/2025 (சனிக்கிழமை) 240 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பேருந்துகள் எங்கிருந்து இயக்கம்
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 14/02/2025 வெள்ளிக் கிழமை அன்று 51 பேருந்துகளும் 15/02/2025 சனிக்கிழமை அன்று 51 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மாதாவரத்திலிருந்து 14/02/2025 அன்று 20 பேருந்துகளும் 15/02/2025 அன்று 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
முன் பதிவு செய்து பயணம் செய்திடுக
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 6,332 பயணிகளும் சனிக்கிழமை 2,912 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 6,792 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ளஇருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.