- Home
- Tamil Nadu News
- 210 இடங்களில் NDA கூட்டணி வெற்றி உறுதி.. திமுகவை விளாசித் தள்ளிய இபிஎஸ்.. பிரதமர் மோடிக்கு புகழாரம்!
210 இடங்களில் NDA கூட்டணி வெற்றி உறுதி.. திமுகவை விளாசித் தள்ளிய இபிஎஸ்.. பிரதமர் மோடிக்கு புகழாரம்!
சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுராந்தகத்தில் NDA பொதுக்கூட்டம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது. பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கட்சியின் கூட்டணி தலைவர்கள் ஒரே மேடையில் கைகோர்த்தனர்.
210 இடங்களில் வெற்றி பெறுவோம்
இந்த கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ''மக்களை வாட்டி வதைக்கும் திமுக ஆட்சி தேவையில்லை. திமுக ஆட்சி மக்களுக்கு கொடுத்தது துன்பம், வேதனை, ஊழல்தான். வரும் தேர்தல் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும். இதுதான் திமுகவுக்கு இறுதித்தேர்தல். ஏனெனில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் NDA கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும். அதிமுக பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சி அமைக்கும்'' என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடிக்கு புகழாரம்
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ''இந்த தேர்தலில் திமுகவின் குடும்ப வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். பிரதமர் மோடி அவர்கள் இந்த மண்ணில் கால் வைத்தவுடன் இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது.
இது திமுகவின் உதயசூரியன் சின்னம் மறைந்து ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதை குறிக்கிறது. கொரோனா காலத்தில் தடுப்பூசி தயாரிப்பை ஊக்குவித்து கோடிக்கணக்கான இந்தியர்களைக் காப்பாற்றியவர் தான் பிரதமர் மோடி.
பை பை ஸ்டாலின்
திமுக வேண்டுமென்றே மத்திய அரசுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசிடம் திட்டங்களை கேட்டு பெற்றோம். அவர்களும் கொடுத்தார்கள். அதிமுக ஆட்சியில் 14 மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசு வழங்கியது. மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம், பை பை ஸ்டாலின்'' என்று கூறியுள்ளார்.

