- Home
- Tamil Nadu News
- உயிரே போனாலும் போராட்டத்தை கைவிட மாட்டேன்..! ராகுல் சொல்லியும் அடம் பிடிக்கும் MP சசிகாந்த் செந்தில்
உயிரே போனாலும் போராட்டத்தை கைவிட மாட்டேன்..! ராகுல் சொல்லியும் அடம் பிடிக்கும் MP சசிகாந்த் செந்தில்
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை உடனடியாக விடுவிக்கக் கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்திலின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

தமிழகத்திற்கான கல்வி நிதி
2025 - 26ம் கல்வி ஆண்டுக்கான தமிழகத்திற்கான கல்வி நிதியை ஒதுக்கீடு செய்யாமல் மத்திய அரசு தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது. மேலும் மும்மொழி கொள்கை அடங்கிய புதிய தேசிய கல்வி கொள்கையை தமிழகம் ஏற்றால் மட்டுமே தமிழகத்திற்கான கல்வி நிதி விடுவிக்கப்படும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இதன் விளைவாக கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பயிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி சார்ந்த பல திட்டங்கள் முடங்கி உள்ளன.
4வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம்
இந்நிலையில், தமிழக மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி நிதியை வழங்க வலியுறுத்தி திருவள்ளூர் எம்.பி.சசிகாந்த் செந்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக எம்.பி.யின் உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபடியே சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதத்தைத் தொடர்கிறார்.
மருத்துவமனை தரப்பில்
எம்.பி.யின் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், “சசிகாந்த் செந்திலுக்கு ஏற்கனவே உடலில் சில குறைபாடுகள் உள்ளன. அவரது தொடர் போராட்டத்தால் உடல் நலன் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அவரது போராட்டம் தொடரும் பட்சத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிருக்கே ஆபத்தாக மாறக் கூடும் என்று எச்சரித்துள்ளனர்.
தலைவர்கள் ஆதரவு
தமிழக கல்வி நிதிக்காக போராட்டம் நடத்தி வரும் எம்.பி.யை பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அமைச்சர் நாசர், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, திருநாவுக்கரசு, எம்.பி.துரைவைகோ உள்ளிட்டோர் நேரில் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
ராகுல் கோரிக்கை
போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சசிகாந்த் செந்திலை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, உங்களது போராட்டம் மிக மிக முக்கிய பிரச்சினை தொடர்புடையது. உங்களது நோக்கம் வெற்றி பெற வாழ்த்துகள். இருப்பினும் உங்கள் உடல் நலனை கவனத்தில் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டதாகவும், ஆனால் எனது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டேன் என்று அவர் தீர்க்கமாக தெரிவித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.