- Home
- Tamil Nadu News
- சென்னையை குறிவைத்த 'Montha' புயல்.! 27ம் தேதி வங்க கடலில் உருவாகும் ராட்சசன்- எச்சரிக்கும் வானிலை
சென்னையை குறிவைத்த 'Montha' புயல்.! 27ம் தேதி வங்க கடலில் உருவாகும் ராட்சசன்- எச்சரிக்கும் வானிலை
வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, 'மோன்தா' புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக, வரும் 27ம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாகவே கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. அதேபோல் ஆறுகள், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை
இந்நிலையில் கடந்த 22ம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. மேலும் தாழ்வு மண்டலமாகவோ, புயலாகவோ வலுவடையும் எதிர்பார்க்கப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் அறிவிக்கப்பட்ட கனமழை எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது.
காற்றழுத்த தாழ்வு பகுதி
அதன் தொடர்ச்சியாக தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவானது. இதன் காரணமாக இன்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று 2வது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
மோன்தா புயல்
இந்நிலையில், வங்கக்கடலில் இன்று காலை உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 26-ம் தேதி அதாவது நாளை மறுநாள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், வருகிற 27ம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும் இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. இந்த புயலுக்கு ‘மோன்தா’ (Montha) என தாய்லாந்து நாடு பெயரிட்டுள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், ராணிப்டே்டை மாவட்டங்களில் 27ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.