- Home
- Tamil Nadu News
- பிரதமர் மோடியை திடீரென சந்தித்த கமல்ஹாசன்! அவர் சொன்ன 'அந்த' வார்த்தையை நோட் பண்ணீங்களா?
பிரதமர் மோடியை திடீரென சந்தித்த கமல்ஹாசன்! அவர் சொன்ன 'அந்த' வார்த்தையை நோட் பண்ணீங்களா?
நடிகரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார். மோடியை சந்தித்தற்கான காரணம் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Actor and MP Kamal hasan Met PM Modi
நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவரும் மற்றும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாடு சார்பாக கீழடி அகழாய்வை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் வைத்ததாக கமல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை சந்தித்த கமல்ஹாசன்
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதவில் கூறுகையில், ''மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தேன். ஒரு கலைஞனாகவும் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகவும் அவரிடம் சில கோரிக்கைகளைத் தெரிவித்திருக்கிறேன். அவற்றுள் தலையாயது கீழடி.
தமிழின் தொன்மையை, தமிழ் நாகரிகத்தின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொல்லும் தமிழர்களின் முன்னெடுப்புகளுக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்'' என்றார்.
பதவியேற்றவுடன் உறுதி கொடுத்த கமல்ஹாசன்
நாடாளுமன்ற தேர்தல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் திமுகவுக்கு ஆதரவு கொடுத்ததால் அதற்கு கைமாறாக திமுக சார்பில் கமல்ஹாசன்ல் மாநிலங்களவை எம்.பி.யாகி உள்ளார். பதவியேற்ற பிறகு அவர் ''பிரிவினையின் ஆபத்துகளிலிருந்து நமது நாட்டை மீட்க வேண்டும். நான் ஒரு சமூகத்திற்காக அல்ல. பொது நன்மைக்காகப் பேசுவேன். டெல்லியில் தமிழ்நாட்டின் உறுதியான குரலாக ஒலிக்க பாடுபடுவேன். குறுகிய ஆதாயத்திற்காக அல்லாமல் தேசிய வளர்ச்சிக்காக பாடுபடுவேன்'' என்று தெரிவித்து இருந்தார்.
மோடியிடம் கமல் முக்கிய கோரிக்கை
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி நாகரீகம் கி.மு. 3ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என நம்பப்படுகிறது. இது தொடர்பாக இந்திய தொல்லியல் துறை அகழாய்வு நடத்திய நிலையில், தொல்லியல் துறை நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணன், கடந்த 2023 ஜனவரியில் இந்திய தொல்லியல் துறை இயக்குநரிடம் ஆய்வறிக்கை சர்ப்பித்தார்.
ஆனால் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் எனக்கோரி இந்திய தொல்லியல் துறை இந்த ஆய்வறிக்கையை திருப்பி அனுப்பியது. கீழடி ஆய்வறிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்தது. இந்த கீழடி விவகாரம் குறித்து தான் கமல்ஹாசன் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.