- Home
- Tamil Nadu News
- ஜெய்பீம் முதல் பைசன் வரை! மக்களை கவனிக்காமல் முழு நேர சினிமா விமர்சகராக மாறிய ஸ்டாலின்! விளாசிய இபிஎஸ்!
ஜெய்பீம் முதல் பைசன் வரை! மக்களை கவனிக்காமல் முழு நேர சினிமா விமர்சகராக மாறிய ஸ்டாலின்! விளாசிய இபிஎஸ்!
தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்களை கவனிக்காமல் எதற்கு முதல்வர் ஆனோம் என்பதை மறந்து முழு நேர சினிமா விமர்சகராக மாறி விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

EPS Attacks Stalin for Being Full-Time Film Critic
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா நடிப்பில் வெளியான 'பைசன்' திரைப்படம் விமர்சனரீதியாகவும், வசூல்ரீதியாகவும் வெற்றி நடை போடுகிறது. இந்த படத்தை பார்த்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாரி செல்வராஜை புகழ்ந்து தள்ளினார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஸ்டாலின், ''பைசன் மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்.
பைசன் படத்தை பாராட்டிய ஸ்டாலின்
தன் திறமையை மட்டுமே நம்பி, கிராமத்தில் இருந்து சாதிக்கக் கிளம்பிய ஓர் இளைஞன், கபடிக் கோட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் சந்திக்கும் போராட்டங்களை எதிர்கொண்டு வெற்றி பெற்ற கதையை மிகச் சிறப்பான திரை அனுபவமாக மாற்றியுள்ளார் மாரி செல்வராஜ். விளையாட்டுத் துறையை மையமாக வைத்து, இளைஞர்கள் கைக்கொள்ள வேண்டிய பாதையை, அரசியலை மிக முதிர்ச்சியுடன் காட்டியிருக்கிறார்.
மாரியின் திரைமொழி நேர்த்தி
சகோதரர் மாரியின் திரைமொழியும், கலைநேர்த்தியும், மேலும் மேலும் மேம்பட்டு வருவதற்கு எடுத்துக்காட்டாக 'பைசன்' மிளிர்கிறது. இத்திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, மாரியின் திரைக்கதைக்கு உயிரூட்டியுள்ள துருவ் விக்ரம், பசுபதி, அனுபமா, ரஜிஷா உள்ளிட்ட நடிகர்கள், பின்னணியில் உழைத்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்! இதுபோல மேலும் பல படைப்புகளைத் தமிழ்த் திரையுலகுக்கு வழங்க மாரி செல்வராஜுக்கு எனது வாழ்த்துகள்'' என்று கூறியிருந்தார்.
ஸ்டாலினுக்கு எடப்பாடி கண்டனம்
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் மக்களின் துன்பங்களை கவனிக்காமல் முழு நேர சினிமா விமர்சகராக மாறி விட்டதாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து இபிஎஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறுகையில், ''நாற்று நட்ட கைகளில், மழையில் நனைந்து முளைத்திருந்த நெல்லைப் பிடித்த போது, விவசாயிகளின் விவரிக்க முடியாத வேதனையை உணர்ந்தேன்.
முழு நேர சினிமா விமர்சகராக மாறி விட்டார்
ஆனால், இந்த நெல்லைப் பிடித்திருக்க வேண்டிய முதல்வர் மு.க.ஸ்டாலினின் கை, படக்குழுவினரின் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறது. திரைப்படங்களை பார்ப்பதிலோ, திறமையான திரைப்பட குழுவினரை பாராட்டுவதிலோ எந்த தவறும் இல்லை. ஆனால் தான் எதற்கு முதல்வர் ஆனோம்? என்பதையே மறந்துவிட்டு, முழுநேர சினிமா விமர்சகராக மாறிவிட்டார் இன்றைய பொம்மை முதல்வர் என்பதுதான் கவலை அளிக்கிறது,
சினிமா பார்க்க நேரம் இருக்கிறது
ஜெய்பீம் படம் பார்த்து உள்ளம் உலுக்கிப் போனவர், தன் ஆட்சியில் தொடர்கதையாக உள்ள அஜித்குமார் போன்ற லாக்கப் மரணங்களைத் தடுப்பதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுத்தாரா? ஜெய்பீம் முதல் கூலி, பைசன் வரை, சினிமாக்களைப் பார்க்க, ரசிக்க, கருத்து தெரிவிக்க தான் இன்றைய முதல்வருக்கு நேரம் இருக்கிறது.
விவசாயிகளை யோசிக்க நேரமில்லை
தென் தமிழகம் மழையில் மிதந்த போது, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு டெல்லி பறந்தவர் தானே நீங்கள் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் போது கூலி திரைப்படம் பார்த்தவர் தானே நீங்கள்? அதே போலத் தான், இப்போதும் மழையால் நெல் முளைத்துப் போய், தாங்கள் உழைத்து பயிரிட்ட விவசாயிகளின் துயரங்கள் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல், பைசன் படம் பார்க்க மணிக்கணக்கில் நேரம் செலவழித்துக் கொண்டு இருக்கிறீர்கள்.
மக்கள் கண்ணீரை உணராத மன்னர்
இதுவரை 31 உயிர்கள் பருவமழையால் இழந்திருக்க, மழை மற்றும் புயல் காலத்தில் மக்களைக் காப்பதற்கான உரிய நெறிமுறைகளை வகுப்பது பற்றி யோசிக்க நேரம் இருந்ததா? அது சரி, விவசாயிகளை, ஏழை எளிய மக்களைப் பார்க்க, அவர்களின் வேதனைகளைக் கேட்டறிய உங்களுக்கு நேரம் இருக்காது தான். விவசாயிகளின், மக்களின் கண்ணீரை உணராத இந்த குடும்ப மன்னராட்சியாளர்களுக்கு, மக்களாட்சியின் சக்தியை உணர்த்தப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை'' என்றார்.