- Home
- Tamil Nadu News
- பள்ளி மாணவர்களின் வங்கி கணக்கு! கல்வித்துறையில் பறந்த முக்கிய உத்தரவு என்ன தெரியுமா?
பள்ளி மாணவர்களின் வங்கி கணக்கு! கல்வித்துறையில் பறந்த முக்கிய உத்தரவு என்ன தெரியுமா?
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக, செயல்படாத வங்கிக் கணக்கு விவரங்களை சரிசெய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு வங்கி கணக்கு! கல்வித்துறையில் பறந்த முக்கிய உத்தரவு என்ன தெரியுமா?
திமுக அரசு வெற்றி பெற்று முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆரம்ப கல்வியே அடிப்படை கல்வி என்ற நோக்கில் தரமான கல்வியை வழங்க வேண்டும் என மாநில பாடத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி மாணவர்களின் உயர்கல்விக்கு வழிவகுத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் பள்ளி மாணவர்களின் இடை நிற்றலைத் தடுக்கவும், நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்காகவும், கல்வியில் சிறந்து விளங்கவும் பல்வேறு கல்வி உதவித் திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.
Education Scholarship
குறிப்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 11ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு சிறப்பு கல்வி ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது. மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கல்விகற்கும் மாணவ, மாணவிகள் பள்ளியிலோ அல்லது பள்ளி சார்ந்த செயல்பாடுகளின் பொழுது எதிர்பாராத விபத்தினால் மரணமடைந்தவர்க்கு ரூ.1,00,000 எனவும், படுகாயமடைந்தவருக்கு ரூ.50,000 எனவும், சிறிய காயங்களுக்கு ரூ.25,000 எனவும், அம்மாணவனின் குடும்பத்தாருக்கு நிவாரண நிதித் தொகை வழங்கப்படுகிறது.
Tamilnadu Government
இந்நிலையில் தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அப்பள்ளியிலேயே வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு பதிவு செய்தல், வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைத்தல் போன்றவற்றை மேற்கொள்ள பள்ளிக்கல்வி, தொடக்கக்கல்வி, தனியார் பள்ளி இயக்குநரகம் ஆகியவை அறிவுறுத்தியுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் கல்வி உதவித் தொகை பெறவுள்ள பள்ளி மாணவர்களின் செயல்படாத வங்கிக் கணக்கு விவரங்களை சரிசெய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
School Education Department
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்: பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு ஏதுவாக வங்கி கணக்கு தபால் அலுவலகங்கள் வாயிலாக தொடங்க ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, உதவித் தொகை பெறுவதற்காக நிலுவையில் உள்ள மாணவர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் மற்றும் இந்திய தேசிய நிதி கழகத்தால் செயல்படாத வங்கிக் கணக்குகள் குறித்த தரவுகளும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
Bank Account
இதை ஒரு செயல்திட்டமாக உருவாக்கி நிலுவையில் உள்ள அனைத்து பட்டியலையும் துரிதமாக முடிக்க வேண்டும். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்க வேண்டும். மேலும், புதுப்பிக்கப்பட்ட பட்டியலை சரியாக முடித்து கொடுக்க தேவையான ஒருங்கிணைப்பை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.