கட்சி உடைய கூடாது என அமைதி காத்தேன்..! இனி கதகளி தான் செங்கோட்டையன்!
அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் கே.ஏ. செங்கோட்டையனுக்கும் இடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்,

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமியுடன் முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான கே.ஏ. செங்கோட்டையன் கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. அந்த வகையில் 2025 பிப்ரவரியில் கோவையில் நடைபெற்ற அத்திக்கடவு-அவினாசி திட்ட பாராட்டு விழாவில், எடப்பாடி பழனிசாமி புகைப்படம் மட்டுமே இடம்பெற்றிருந்தது. எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் படங்கள் இடம்பெறாததை காரணம் காட்டி செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் தொடர்ந்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தார். சட்டமன்றத்திலும் செங்கோட்டையன் தனித்து செயல்பட்டார்.
இதனையடுத்து திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அதிமுக பாஜக கூட்டணி அமைந்தது. இதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன் இடையே சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு பிரச்சனை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி பிரசாரத்துக்கு வந்தபோதுகூட அவரை செங்கோட்டையன் வரவேற்கவில்லை. பிரசாரத்திலும் பங்கேற்கவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனை ஓரங்கட்டத் தொடங்கினார். அவரது அதரவாளர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் புறக்கணித்து வந்தார். இந்நிலையில் செப்டம்பர் 5ம் தேதி மனம் திறந்து பேச போவதாக செங்கோட்டையன் அறிவித்தார். இதனையடுத்து தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்ததார். இதனால் அதிமுகவில் இருந்து விலகி திமுகவிற்கு செல்லப்போகிறாரா தவெகவுக்கு தாவப்போகிறாரா அல்லது சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை ஒருங்கிணைக்கப்போகிறாரா என்ற பேச்சுகள் அடிப்பட்டு வந்தன.
இந்நிலையில் எம்.ஜ.ஆர்., ஜெயலலிதா உருவப் படங்களை வைத்து செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன்: 1972ல் புரட்சித் தலைவர் எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட இயக்கம் தான் அதிமுக. எம்ஜிஆரால் அதிமுக தொடங்கப்பட்ட காலத்தில் கிளைக் கழக செயலாளராக எனது பணியை தொடங்கினேன். கடந்த 1975ஆம் ஆண்டில் பொதுக்குழு நடத்தும் குழுவில் பொருளாளராக நியமிக்கப்பட்டேன். நாடே போற்றும் தலைவராக விளங்கிய எம்ஜிஆர் 1977ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் போட்டியிட வாய்ப்பு அளித்தார். சத்தியமங்கலத்தில் போட்டியிட சொன்ன எம்ஜிஆர் என் பெயரை உச்சரி நீ வெற்றி பெறுவாய் என்று சொன்னார். ஆளுமை மக்கள் செல்வாக்கு மிக்க தலைமை தேவை என்பதை ஜெயலலிதாவை ஆதரித்தோம். திராவிடர்கள், ஆன்மீகவாதிகள் ஏற்றுக் கொள்ளும் தலைமை பண்பை பெற்றிருந்தார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவுக்கு பிறகு முதல்வர் யார் என்ற நிலை வந்த போது எடப்பாடி பழனிச்சாமி சசிகலா தேர்வு செய்தார். அதிமுக என்ற இயக்கமும் உடைந்து விடக்கூடாது என்பதற்காக தான் ஒன்றிணைந்து பணியாற்றினோம். எனக்கு இரண்டு வாய்ப்பு கிடைத்த போதும் கட்சி உடைந்து விடக்கூடாது என இருந்தேன். அதிமுக பல்வேறு தியாகங்களை செய்து இருக்கிறேன். 2016க்கு பின் தேர்தல் களம் போராட்ட களமாக ஆகிவிட்டது என்பதை நாம் அறிவோம் என்றார்.