- Home
- Tamil Nadu News
- தென் தமிழகத்தை ரவுண்டு கட்டப்போகும் மழை.. 'இந்த' 2 மாவட்ட மக்கள் உஷாரா இருங்க.. வானிலை அப்டேட்!
தென் தமிழகத்தை ரவுண்டு கட்டப்போகும் மழை.. 'இந்த' 2 மாவட்ட மக்கள் உஷாரா இருங்க.. வானிலை அப்டேட்!
தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2 மாட்டங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை அப்டேட் குறித்த முழுமையான தகவலை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தமிழகத்தில் மழை
தமிழகத்தில் கடந்த ஒன்றை மாதங்களுக்கு மேலாக பனிமூட்டம் இருந்து வருகிறது. பகலில் வெயில் கொளுத்தி வருகிறது. எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. வழக்கமாக தமிழகத்தில் மார்ச் மாதத்தில் இருந்து கோடை வெயில் தொடங்கும் நிலையில், இப்போதே வெயிலின் தாக்கம் கடுமையாக ஆரம்பித்துள்ளது. மழை பெய்யுமா? என மக்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், தமிழகத்தில் ஓரளவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் மகிழ்ச்சி செய்தியை சொல்லியுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது
நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை 0530 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து காலை 0830 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேற்கு-வடமேற்கு திசையிலும் பிறகு வடகிழக்கு திசையிலும் நகரக்கூடும்.
தென் தமிழகத்தில் மழை பெய்யும்
இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிதமான மழைக்கு வாய்ப்பு
மேலும் நாளை (பிப்ரவரி 23) மற்றும் நாளை மறுநாள் (பிப்ரவரி 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் 25ம் தேதி மற்றும் 26ம் தேதிகளில்
தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னையில் எப்படி?
27ம் தேதி மற்றும் 28ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 33-34 செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

