- Home
- Tamil Nadu News
- அரசு பள்ளிக்கு கஞ்சாவுடன் வந்த மாணவன்.. சென்னையில் ஷாக்.. பொங்கியெழுந்த எதிர்க்கட்சிகள்!
அரசு பள்ளிக்கு கஞ்சாவுடன் வந்த மாணவன்.. சென்னையில் ஷாக்.. பொங்கியெழுந்த எதிர்க்கட்சிகள்!
போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது மூலம், ஸ்டாலின் மாடல் திமுக அரசு தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு மாபெரும் துரோகத்தை இழைத்துள்ளது என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளி மாணவனிடம் கஞ்சா
சென்னை வியாசர்பாடியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் வகுப்பறைக்கு கஞ்சா எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஏற்கெனவே கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இப்போது பள்ளி வகுப்பறை வரை போதைப்பொருள் ஊடுருவி இருப்பது சட்டம், ஒழுங்கு சீரழிந்ததை காட்டுவதாக அமைந்துள்ளது.
இபிஎஸ் கடும் கண்டனம்
இந்த நிலையில், பள்ளி மாணவனின் கையில் கஞ்சா வந்ததற்கு முதல்வர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''சென்னை வியாசர்பாடியில் அரசுப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவனிடம் கஞ்சா போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு?
ஒரு ஆட்சியாளராக பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் Total Failure என்பதற்கு இந்த செய்தியே சாட்சி!அறிவுப்பூர்வமான கல்விக்கு வித்திட 11-ம் வகுப்பு பயிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் கையில் அஇஅதிமுக ஆட்சி லேப்டாப்பை கொண்டு சேர்த்தது. ஆனால், இன்றைய திமுக ஆட்சியிலோ, 11-ம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா போதைப்பொருள் தான் சென்றுள்ளது. இது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு?
பள்ளி மாணவர்களை சீரழித்த அரசு
ஆனால், இதையெல்லாம் பற்றி கிஞ்சற்றும் கவலைப் படாத ஒரு முதல்வர் நமக்கு வாய்த்திருப்பது ஆகப்பெரும் சாபக்கேடு! கஞ்சா, போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது மூலம், ஸ்டாலின் மாடல் திமுக அரசு தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு மாபெரும் துரோகத்தை இழைத்துள்ளது. இளைஞர்களை, பள்ளி மாணவர்களை அடியோடு சீரழிக்கத் துணை போகும் இந்த விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
இனியாவது நடவடிக்கை வேண்டும்
ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆண்டுதோறும் நான் தொடர்ச்சியாக சுட்டிக் காட்டி வந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது மாதிரி , வழக்கம் போல "ஓ" போடுவதோடு நிறுத்தாமல், பள்ளி மாணவன் கையில் போதைப்பொருள் வந்தது எப்படி என தீர விசாரித்து, போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த, ஆட்சி மீதம் இருக்கின்ற 2 மாதங்களிலாவது ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்'' என்று கூறியுள்ளார்.

