- Home
- Tamil Nadu News
- டிடிவி தினகரனின் வலதுகரத்தை தட்டித்தூக்கிய முதல்வர் ஸ்டாலின்.. யார் இந்த ரெங்கசாமி?
டிடிவி தினகரனின் வலதுகரத்தை தட்டித்தூக்கிய முதல்வர் ஸ்டாலின்.. யார் இந்த ரெங்கசாமி?
DMK: பாபநாசம் தொகுதி ஒதுக்கப்படாததால் அதிருப்தியில் இருந்த அமமுக துணைப் பொதுச்செயலாளர் ரெங்கசாமி, அக்கட்சியிலிருந்து விலகி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

முன்னாள் எம்எல்ஏ ரெங்கசாமி
தஞ்சாவூர் மாவட்டத்தின் அதிமுக முகங்களில் ஒருவராக அறியப்பட்டவர் மூத்த தலைவர் ரெங்கசாமி. அப்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில் இவரும் ஒருவர். 2019-ம் ஆண்டு தஞ்சாவூர் தொகுதி இடைத்தேர்தலில் ரெங்கசாமி அமமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பாபநாசம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
அதிமுக - அமமுக கூட்டணி
இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், பாபநாசம் தொகுதி அமமுகவிற்கு ஒதுக்கப்படும் என்று ரெங்கசாமி பெரிதும் எதிர்பார்த்தது மட்டுமல்லாமல் தேர்தல் வேலைகளை ஆரம்பித்து செய்து வந்தார். ஆனால், தொகுதிப் பங்கீட்டில் பாபநாசம் தொகுதியை ஒதுக்காமல் திருவையாறு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் அதிமுக போட்டியிடுகிறது.
முன்னாள் எம்எல்ஏ ரெங்கசாமி கடும் அதிருப்தி
இதனால் அமமுக துணைப் பொதுச்செயலாளரான முன்னாள் எம்எல்ஏ ரெங்கசாமி கடும் அதிருப்தி அடைந்தார். அதுமட்டுமல்லாமல் ரெங்கசாமியின் ஆதரவாளர்கள் டிடிவி.தினகரனின் உருவ பொம்மையை எரிக்கும் அளவிற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே அமமுக தலைமை அவரை சமாதானம் செய்ய எவ்வளவோ முயற்சி செய்தது. ஆனால் எதுவும் பயனளிக்கவில்லை.
திமுகவில் இணைந்த ரெங்கசாமி
இந்நிலையில் தனது ஆதரவாளர்களுடன் திமுக? தவெகவில்? இணையலாம் என தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். இதில் ஓபிஎஸ் போல் திமுகவில் இணையலாம் என்பது தான் மெஜாரிட்டி கருத்தாக இருந்தது. இதனையடுத்து அமமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ரெங்கசாமி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னணியில் திமுகவில் இணைந்தார்.
ரெங்கசாமி பாபநாசம் தொகுதியில் போட்டியா?
திமுகவில் இணைந்த கையோடு, பாபநாசம் தொகுதியில் தனக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ரெங்கசாமி தரப்பினர் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. அவரது வருகை திமுகவுக்கு பாபநாசம் பகுதியில் கூடுதல் பலத்தைச் சேர்க்கும். அந்த தொகுதி அவருக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

