பிப்ரவரி 21 அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு!
School Holiday: பிப்ரவரி 21 அன்று நடைபெற உள்ள திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு அன்றைய தினம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறை

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலில் அமாவாசை தினத்தன்று ஊஞ்சல் உற்சபம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிப்பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிப் திருவிழா கடந்த 15ம் தேதி கொடியெற்றத்துடன் தொடங்கியது.
பிப்ரவரி 21ம் தேதி தேரோட்டம்
மறுநாள் பிப்ரவரி 16ம் தேதி மயானக் கொள்ளை விழாவும், விழாவின் 5வது நாளான இன்று தீமிதி விழா நடைபெற்றது. இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான பிப்ரவரி 21ம் தேதி சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த தேரோட்டத்தின் போது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி விழுப்புரம் மாவட்ட பக்தர்களின் வசதிக்காக பிப்ரவரி 21ம் தேதி சனிக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் மற்றும் நகரம், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் எதிர்வரும் பிப்ரவரி 21 அன்று நடைபெற உள்ள திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு 21.02.2026 (சனிக்கிழமை) அன்று ஒரு நாள் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
அரசு அலுவலகங்கள் செயல்படும்
மேற்படி தினத்தில் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு விழுப்புரம் மாவட்ட கருவூலமும் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலகங்களும் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கும் எனவும், மாணவ/மாணவியர்களுக்கு 21.02.2026 அன்று பள்ளி/கல்லூரி இறுதித் தேர்வுகள் நடைபெற தேதி நிர்ணயிக்கப்பட்டிருப்பின் அந்த தேர்வுகள் அன்றைய தேதியில் வழக்கம்போல் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

