பயமா? திமுகவுக்கா? அது அகராதியிலேயே கிடையாது! வைகோவின் நச் பதில்!
ஸ்டாலின் மத்திய அரசு அமைப்புகளின் தவறான பயன்பாடு மற்றும் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் குறித்து வைகோ கருத்து தெரிவித்தார்.

வைகோ
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ: நீட் தேர்வு விலக்கு வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. திமுகவின் நான்கு ஆண்டுகால ஆட்சியில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சொல்லாத வாக்குறுதிகளையும் அரசு நிறைவேற்றி உள்ளது. திராவிட மாடல் ஆட்சி திருப்திகரமாக உள்ளது என்றார்.
பயம் என்பது திமுகவின் அகராதியிலேயே கிடையாது
பயம் என்பது திமுகவின் அகராதியிலேயே கிடையாது. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் மத்திய அரசால் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், அந்த அமைப்புகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது. திமுகவினர் யாரும் இதைப்பற்றி அஞ்சவும் இல்லை. கவலைப்படவும் இல்லை.
பஹல்காம் தீவிரவாத தாக்குதல்
மேலும் பேசிய அவர் பஹல்காமில் 26 பொதுமக்கள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. அதே நேரத்தில், முஸ்லிம் இளைஞர்கள் சிலர் துணிச்சலுடன் செயல்பட்டு மீதமுள்ள மக்களைப் பாதுகாப்பாக மீட்டெடுத்த செய்தி மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது. இந்த செய்தியை ஊடகங்களில் விரிவாக வெளியிடப்படவில்லை. மத்திய அமைச்சரவையில் உள்ள சிலர் போர் தொடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
அப்பாவி மக்கள் பெருமளவில் உயிரிழக்க நேரிடும்
ஆனால், போர் என்பது எளிதான விஷயம் அல்ல. போர் மூண்டால், இரு தரப்பிலும் அப்பாவி மக்கள் பெருமளவில் உயிரிழக்க நேரிடும். பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்க ஒத்துழைக்க வேண்டும். சர்வதேச நாடுகளும் இதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தீவிரவாதிகள் பதுங்கும் இடங்களைக் கண்டுபிடித்து, அவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். போரை ஆதரிப்பவர்கள் அதன் விளைவுகளைப் பற்றி யோசிக்க வேண்டும் என்றார்.