- Home
- Tamil Nadu News
- டிஎஸ்பி சுந்தரேசனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த எடப்பாடி..! நேர்மைக்கு இதுதான் பரிசா?
டிஎஸ்பி சுந்தரேசனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த எடப்பாடி..! நேர்மைக்கு இதுதான் பரிசா?
தி.மு.க. ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளுக்கு மதிப்பில்லை என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். டி.எஸ்.பி. சுந்தரேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேர்மையான அதிகாரிகளுக்கு மதிப்பில்லை
தி.மு.க. ஆட்சியில் டி.எஸ்.பி. சுந்தரேசன் போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு மதிப்பில்லை என்று என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரேசனின் வாகனம் பறிக்கப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் நடந்த தனது 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' பிரசார பயணத்தில் அவர் இவ்வாறு பேசினார்.
எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ
இன்று மாலை மயிலாடுதுறை சின்ன கடைவீதியில் ரோடு ஷோ மூலம் வாகனத்தில் நின்றவாறு எடப்பாடி பழனிசாமி மேலும் பேசியதாவது:
"தி.மு.க. ஆட்சியில் கடந்த 50 மாதங்களில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு எந்த ஒரு பெரிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. வரவிருக்கும் தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வந்துவிட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என்று அவர் பொய்ப் பிரசாரம் செய்து வருகிறார்.
தி.மு.க. என்றாலே வாரிசு அரசியல்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டு மக்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. தன் வீட்டு மக்களைப் பற்றிதான் கவலைப்படுகிறார். தி.மு.க. என்றாலே வாரிசு அரசியல். மன்னர் ஆட்சி இந்தியாவில் ஒழிக்கப்பட்டது. ஆனால், மீண்டும் மன்னர் ஆட்சி அமைப்பதற்கு மு.க.ஸ்டாலின் துடிக்கிறார்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் கடுமையான நெருக்கடி தரப் போகிறார்கள். வி.சி.க. ஆட்சியில் பங்கு கேட்கிறது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்கின்றன. தேர்தல் நெருங்கும்போது சில கட்சிகள் தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியே வரும்.
டி.எஸ்.பி. சுந்தரேசன் விவகாரம்
தி.மு.க. ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளுக்கு மதிப்பில்லை. மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரேசனின் வாகனத்தை பறித்துள்ளனர். முதலமைச்சர் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற திட்டத்தின் மூலம் தி.மு.க.வில் உறுப்பினர்களாகச் சேருங்கள் என வீடு வீடாகச் செல்கிறார். மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
தி.மு.க. எதிர்கட்சியாக இருந்தபோது பெட்டியில் மனு வாங்கினார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் பெட்டியில் உள்ள மனுக்களை எடுத்து தீர்வு காண்பேன் எனத் தெரிவித்தனர். இப்படி கூறிவிட்டு எதற்கு 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தைத் தொடங்கி மக்களை ஏமாற்றுகின்றனர்.
தி.மு.க. ஆட்சியில் மளிகைப் பொருட்கள் முதல் கட்டுமானப் பொருட்கள் வரை அனைத்தும் விலை உயர்ந்துள்ளது. ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார்."
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.