- Home
- Tamil Nadu News
- இபிஎஸ்-ஐ முதல்வராக்கவா விஜய் பல கோடி ரூபாய் வருமானத்தை விட்டுட்டு வந்தாரு? TTV தினகரன் மாஸ் கேள்வி
இபிஎஸ்-ஐ முதல்வராக்கவா விஜய் பல கோடி ரூபாய் வருமானத்தை விட்டுட்டு வந்தாரு? TTV தினகரன் மாஸ் கேள்வி
Edappadi Palanisamy: பழனிசாமி தலைமையிலான அதிமுகவால் ஆட்சிக்கு வர முடியாது என்றும், அவரது தலைமையை விஜய் ஏற்பது தற்கொலைக்கு சமம் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: 2026 சட்டமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி உருவாக வாய்ப்புள்ளது. அமமுக தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் கூட்டணி குறித்து தெரிவிப்போம். எங்கள் கூட்டணிதான் வெற்றி பெறும். விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமையும் என்று தான் கூறினேன். விஜய் கூட்டணிக்கு செல்வோம் என்று நான் சொல்லவே இல்லை. அரசியலில் அனுபவத்தை விட, மக்கள் யாரை ஏற்று கொள்கின்றனர் என்பதுதான் முக்கியம். அரசு சரியாக செயல்பட்டால் வரவேற்பதும், சரியில்லை என்றால் எதிர்த்து குரல் கொடுப்பதும் எங்களது கொள்கை.
வியப்பு கொடுக்கும் வகையில் கூட்டணிகள் அமையும்
தேர்தல் நேரத்தில் பெரும் வியப்பு கொடுக்கும் வகையிலான கூட்டணிகள் அமையும். அதுபோன்ற சூழல் தான் தற்போது உருவாகி வருகிறது. ஏற்கனவே பிரமாண்டமான கட்சி அதிமுக கூட்டணிக்கு வரப்போகிறது என சொன்னதற்கு மதுரை மாநாட்டில் விஜய் பதிலடி கொடுத்துவிட்டார். மீண்டும், இவர்களின் அழைப்புக்கெல்லாம் விஜய் நிச்சயம் பதில் சொல்வார்.
பழனிசாமி துரோகத்தால் வீழ்த்தப்படுவார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுக இன்று இல்லை. பழனிசாமி அதிமுகவாக உள்ளது. அவரால் ஆட்சிக்கு வர முடியாது என்று தெரிந்தும், எங்களோடு கூட்டணிக்கு வாங்கள் என்று மற்றவர்களை அழைப்பதை தமிழக மக்கள் நகைப்பாக பார்க்கின்றனர். காலில் விழுந்து பதவி பெற்றுவிட்டு காலை வாரியவர் பழனிசாமி. பழனிசாமி துரோகத்துக்கு அவர் வீழ்த்தப்படுவார்.
இபிஎஸ்வுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்
பழனிசாமி தலைமையை விஜய் ஏற்றுகொள்வது தற்கொலைக்கு சமம். விஜய் தன் தலைமையில் தான் கூட்டணி என உறுதியாக சொல்லியுள்ளார். கூவிக்கூவி அழைப்பவர்களுக்கு இதனைத் தெளிவுப்படுத்துகிறேன். பழனிசாமியை முதல்வராக்கவா விஜய் பல கோடி ரூபாய் வருமானத்தை விட்டு வந்தார்? தனது தலைமையில்தான் கூட்டணி அமைப்பார். டெல்டா மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. துயரத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அரசு படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து, மது இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்றார்.