- Home
- Tamil Nadu News
- திமுக கூட்டணியில் அதிகரிக்கும் விரிசல்..! ‘கை’யை குதறும் சிறுத்தை..! அடங்க மறுக்கும் காங்கிரஸ்..
திமுக கூட்டணியில் அதிகரிக்கும் விரிசல்..! ‘கை’யை குதறும் சிறுத்தை..! அடங்க மறுக்கும் காங்கிரஸ்..
DMK Alliance: திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் கட்சி இடையேயான வார்த்தைப் போர் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

ராமதாஸ்க்கு முட்டுக்கட்டை போடும் விசிக
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், தவாக, கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதனிடையே பாமகவின் ஒரு தரப்பான ராமதாஸ் பிரிவு தற்போது வரை கூட்டணி நிலைப்பாட்டை வெளிப்படுத்தாத நிலையில், ராமதாஸ் திமுக கூட்டணிக்கு வர விசிக முட்டுக்கட்டையாக உள்ளது. இதனிடையே கூட்டணியின் நலனுக்காக விசிக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என கூறியதாக செய்திகள் பரவின.
DMK Allianceநாகரீகமற்ற அரசியல் அணுகுமுறை
இது தொடர்பாக எதிர்வினையாற்றிய விசிக சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி, “கூட்டணியில் யார் யார் என்பதை திமுக முடிவெடுக்கும் என்பதை தான் நாங்களும் சொல்லி விட்டோமே. சாதியவாத மதவாத சக்திகள் இருக்கும் இடத்தில் இருக்க மாட்டோம் எனும் நிலைப்பாட்டை விசிக மாற்றிக் கொள்ளும் என்கிற தோற்றத்தை திணிப்பது நாகரீகமற்ற அரசியல் அணுகுமுறை” என்று காட்டமாக பதிவிட்டிருந்தார்.
உண்மைக்கு புறம்பான திரிக்கப்பட்ட செய்தி
இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜியின் கருத்துக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, தமது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில், “மதுரையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., அவர்கள், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான கூட்டணி விவகாரங்களில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிலைப்பாட்டை மிகத் தெளிவாகவும், பொறுப்புடனும் எடுத்துரைத்திருந்தார்.
அந்தச் சந்திப்பில், திமுக தலைமையிலான கூட்டணியில் எந்த அரசியல் கட்சி சேர வேண்டும் அல்லது சேரக் கூடாது என்பது குறித்து அவர் எவ்விதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை. குறிப்பாக, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், திமுக கூட்டணியில் இடம் பெற வேண்டும் என அவர் கூறியதாக வெளிவந்த செய்திகள் முற்றிலும் தவறானவை, உண்மைக்கு புறம்பானவை மற்றும் திரிக்கப்பட்ட செய்திகளாகும்.
இறுதி முடிவு ஸ்டாலின் கையில்..
உண்மையில், தமிழ்நாட்டின் அரசியல் நிலவரத்தை கருத்தில் கொண்டு, கூட்டணி தொடர்பான இறுதி முடிவுகள் அனைத்தும் தமிழ்நாட்டிற்கு தலைமையாற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலேயே எடுக்கப்படும் என்பதையே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அவர்கள் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார்.
உண்மையை அறிந்து கொள்ளாமல்..
இந்நிலையில், உண்மையை முழுமையாக அறிந்து கொள்ளாமல், ஊடகங்களில் வெளியான ஆதாரமற்ற செய்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி அவர்கள் கண்டனம் தெரிவித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும்.
அரசியல் நோக்கத்துடன் திரித்து விளக்கம்
கூட்டணிக் கட்சிகளுக்கிடையே நிலவும் நல்லுறவு, பரஸ்பர மரியாதை மற்றும் அரசியல் நாகரிகத்தைப் பேண வேண்டிய இத்தகைய காலகட்டத்தில், பொறுப்பற்ற முறையில் வெளியிடப்படும் தவறான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு கருத்துகளை வெளியிடுவது, கூட்டணியின் ஒற்றுமைக்கும் அரசியல் நிலைத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலானதாகும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., அவர்கள் கூறாத கருத்தை கூறியதாகப் பரப்பி, அதனை அரசியல் நோக்கத்துடன் திரித்து விளக்கி, உண்மை அறியாமல் கண்டனம் தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
எனவே, உண்மைக்கு புறம்பான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களுக்கும், அத்தகைய செய்திகளை பரப்பியவர்களுக்கும் எதிராக கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது. இந்த வார்த்தை மோதல் காரணமாக இந்தியா கூட்டணியில் விரிசல் உருவாகியுள்ளதோ என்ற கேள்வி வலுத்துள்ளது.

