காவிரி தண்ணீரை உடனே தமிழ்நாட்டுக்கு திறங்க.! கர்நாடகா அரசுக்கு ஆணையம் உத்தரவு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி ஆணையம் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளதால், மேட்டூர் அணை விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் விவசாயிகளுக்கு வாழ்வாதரமாக இருப்பது காவிரி ஆறாகும். அந்த வகையில் மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும். குறுவை பாசனத்திற்காக இன்னும் 3 வாரங்களில் காவிரியில் தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில், குறுவைப் பாசனத்திற்காக விவசாயிகள் தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 13,606 கன அடியாக அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர் மட்டம் 110.77 அடியாக உயர்ந்துள்ள நிலையில் நீர் இருப்பு 79.508 டி.எம்.சி. ஆக உள்ளது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது. எனவே தண்ணீர் தொடர்ந்து தமிழக எல்லைக்கு வந்து கொண்டுள்ளதால் மேட்டூர் அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காவிரி ஆணைய ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக மற்றும் கர்நாடக மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதம் திறந்துவிட வேண்டிய 9.19 டி.எம்.சி தண்ணீரையும், ஜூலை மாதத்திற்கு திறந்துவிட வேண்டிய 31.24 டி.எம்.சி தண்ணீரையும் கர்நாடகா திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையானது முன்கூட்டியே திறக்கக்கூடிய நிலையை எட்டியுள்ளது.