- Home
- Tamil Nadu News
- எம்எல்ஏ பொன்னுசாமி எப்படிப்பட்ட மனுஷன் தெரியுமா? அவர் என் மீது! கலங்கிய முதல்வர் ஸ்டாலின்!
எம்எல்ஏ பொன்னுசாமி எப்படிப்பட்ட மனுஷன் தெரியுமா? அவர் என் மீது! கலங்கிய முதல்வர் ஸ்டாலின்!
Senthamangalam MLA Ponnusamy:சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்எல்ஏ பொன்னுசாமி (74) மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்.

திமுக எம்எல்ஏ பொன்னுசாமி
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டப்பேரவை தொகுதி திமுக எம்எல்ஏ பொன்னுசாமி (74). இவர் கடந்த 2001, 2006ம் ஆண்டுகளில் சேந்தமங்கலம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பின்னர் 2016ம் ஆண்டு திமுக சார்பில் சேந்தமங்கலம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கடந்த 2021ம் ஆண்டு நடத்த தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மாரடைப்பால் உயிரிழப்பு
இந்நிலையில் மாரடைப்பு காரணமாக திமுக எம்எல்ஏ பொன்னுசாமி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திமுக மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தும் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில்: சேந்தமங்கலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அருமைச் சகோதரர் கு.பொன்னுசாமி அவர்கள் மறைந்த துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். சேந்தமங்கலம் தொகுதி மக்களின் நன்மதிப்பை பெற்று இரண்டு முறை அவர்களது பிரதிநிதியாகச் சட்டமன்றத்தில் மக்கள் பணி ஆற்றிய அவரது மறைவு அத்தொகுதி மக்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பேரிழப்பாகும்.
என் மீதும் பேரன்பு கொண்டவர்
கழகத்தின் மீது தீவிரப் பற்றும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீதும் - என் மீதும் பேரன்பும் கொண்டு செயலாற்றி வந்த அவர், நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகத் துணைச் செயலாளராகக் கழகத்தை வளர்த்ததோடு, பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அயராது பாடுபட்டவர். அவரது மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் சேந்தமங்கலம் தொகுதி மக்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பொதுவாழ்வில் அவருக்குத் துணை நின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த உடன்பிறப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.