- Home
- Tamil Nadu News
- சென்னை டூ தாம்பரம், செங்கல்பட்டு மின்சார ரயில் நேரங்கள் மாற்றம்! ஜூன் 1 முதல் புதிய டைம் டேபிள்!
சென்னை டூ தாம்பரம், செங்கல்பட்டு மின்சார ரயில் நேரங்கள் மாற்றம்! ஜூன் 1 முதல் புதிய டைம் டேபிள்!
Chennai EMU Trains: சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் நேரங்கள் ஜூன் 1ம் தேதி முதல் மாற்றப்படுகிறது. புறநகர் ரயில்களின் புதிய டைம் டேபிளை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

கைகொடுக்கும் சென்னை மின்சார ரயில்கள்
சென்னையில் கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு, மூர் மார்க்கெட்-திருவள்ளூர்-அரக்கோணம், மூர் மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி மற்றும் கடற்கரை-வேளச்சேரி ஆகிய இடங்களுக்கு புறநகர் மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. சென்னையின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க புறநகர் மின்சார ரயில்கள் கைகொடுத்து வருகின்றன. மேலும் புறநகர் பகுதிகளில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வருபவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மின்சார ரயில்களால் பயனடைந்து வருகின்றனர்.
சென்னை டூ தாம்பரம், செங்கல்பட்டு ரயில் நேரங்கள் மாற்றம்
இதில் சென்னை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடம் எப்போதும் பிஸியாக இருக்கும் நிலையில், இந்த வழித்தடத்தில் இயங்கி வரும் மின்சார ரயில்களின் நேரங்கள் ஜூன் 1ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, வார நாட்களில் அதாவது திங்கள் முதல் சனிக்கிழமை வரை சென்னை கடற்கரையில் இருந்து காலை 3.50 மணிக்கு முதல் மின்சார ரயில் புறப்படும். இந்த ரயில் தாம்பரத்துக்கு காலை 4.50 மணிக்கும், செங்கல்பட்டுக்கு காலை 5.40 மணிக்கும் சென்றடையும்.
சென்னை கடற்கரை டூ தாம்பரம், செங்கல்பட்டு ரயில் டைம் டேபிள்
சென்னை கடற்கரையில் இருந்து 2-வது ரயில் காலை 4.10 மணிக்கு புறப்படும். இப்படியாக காலை 6 மணி வரை 20 நிமிடத்திற்கு ஒரு ரெயில் புறப்படும். காலை 6 மணிக்கு பிறகு ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு ஒரு ரயில் தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும். இதேபோல் காலை 7 மணிக்கு பிறகு 10 நிமிடத்திற்கு ஒரு ரயிலும், மதியம் 12 மணிக்கு பிறகு 15 நிமிடத்திற்கு ஒரு ரயிலும், மாலை 4 மணிக்கு பிறகு 10 நிமிடத்திற்கு ஒரு ரயிலும், மாலை 6 மணிக்கு பிறகு 6 நிமிடத்திற்கு ஒரு ரயிலும் இயக்கப்படும்.
இரவு 7 மணிக்கு பிறகு 10 நிமிடத்திற்கு ஒரு ரயிலும், இரவு 8 மணிக்கு பிறகு 15 நிமிடத்திற்கு ஒரு ரயிலும், இரவு 10 மணிக்கு பிறகு 20 நிமிடத்திற்கு ஒரு ரயிலும் என கடற்கரையில் இருந்து 106 மின்சார ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும். கடற்கரையில் இருந்து கடைசி மின்சார ரெயில் இரவு 11.59 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்தை இரவு 12.55 மணிக்கு சென்றடையும்.
செங்கல்பட்டு, தாம்பரம் டூ சென்னை கடற்கரை
இதே போன்று தாம்பரத்தில் இருந்து முதல் மின்சார ரயில் காலை 3.55 மணிக்கு கடற்கரைக்கு புறப்பட்டு செல்லும். அதன்பின்பு தொடர்ந்து 20 நிமிடங்களுக்கு ஒரு ரயில் கடற்கரை நோக்கி புறப்படும். காலை 7 மணிக்கு பிறகு 10 நிமிடத்திற்கு ஒரு ரயிலும், காலை 8.20 மணிக்கு பிறகு 5 நிமிடத்திற்கு ஒரு மின்சார ரயிலும், காலை 8.48 மணிக்கு பிறகு 10 நிமிடத்திற்கு ஒரு ரயிலும், காலை 10 மணிக்கு பிறகு 15 நிமிடத்திற்கு ஒரு ரயிலும், மதியம் 12.50 மணிக்கு பிறகு 20 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், மதியம் 2 மணிக்கு பிறகு 15 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படும்.
மாலை 4 மணிக்கு பிறகு 8 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், மாலை 5.55 மணிக்கு பிறகு 10 நிமிடத்திற்கு ஒரு ரயிலும், மாலை 7.30 மணிக்கு பிறகு 15 நிமிடத்திற்கு ஒரு ரயிலும் இயக்கப்பட இருக்கிறது. தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு கடைசி மின்சார ரயில் இரவு 11.55 மணிக்கு புறப்படும். இது இரவு 12.59 மணிக்கு கடற்கரையை சென்றடையும்.
மேலும் செங்கல்பட்டில் இருந்து கடற்கரை நோக்கி முதல் மின்சார ரயில் காலை 3.55 மணிக்கு புறப்படும். அதன் பிறகு செங்கல்பட்டில் இருந்து 30 நிமிடத்திற்கு ஒரு ரயில் கடற்கரை நோக்கி புறப்பட்டு செல்லும். இப்படியாக 26 ரயில்கள் செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு இயக்கப்படும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் புதிய ரயில் டைம் டேபிள் இதோ
இதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை கடற்கரையில் இருந்து முதல் ரயில் காலை 3.50 மணிக்கு தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கமாக புறப்படும். இந்த நாளில் குறிப்பிட்ட இடைவெளியில் 92 மின்சார ரயில்கள் இயக்கப்படும். மறுமார்க்கமாக செங்கல்பட்டு மற்றும் தாம்பரத்தில் இருந்து முதல் மின்சார ரயில் காலை 3.55 மணிக்கு கடற்கரை நோக்கி புறப்படும். செங்கல்பட்டில் இருந்து குறிப்பிட்ட இடைவெளியில் 47 ரயில்களும், தாம்பரத்தில் இருந்து 97 ரயில்களும் கடற்கரை நோக்கி புறப்பட்டு செல்லும்.

