- Home
- Tamil Nadu News
- பொதுமக்களே.. தப்பி தவறி கூட இந்த நேரத்தில் வெளியே போயிடாதீங்க.. வானிலை மையம் கொடுத்த வார்னிங்
பொதுமக்களே.. தப்பி தவறி கூட இந்த நேரத்தில் வெளியே போயிடாதீங்க.. வானிலை மையம் கொடுத்த வார்னிங்
Tamilnadu Weather: தமிழகத்தில் கோடை வெயில் 100 டிகிரியைத் தாண்டி வாட்டி வதைக்கிறது. வெப்ப அலை வீசும் நிலையில், நீரிழப்பைத் தவிர்க்கவும், பருத்தி ஆடைகளை அணியவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

சுட்டெரிக்கும் வெயில்
தமிழகத்தில் தற்போது கோடை வெயில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. வழக்கத்தை விட இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வேலூர், ஈரோடு, கரூர், திருச்சி மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் வெப்பக்காற்று (Heatwave) வீசி வருகிறது. குறிப்பாக உள் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 முதல் 4 வரை அதிகமாக உள்ளது.
கோடை வெயிலால் அலறும் பொதுமக்கள்
கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னரே வெயில் சதம் அடித்து வருவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது என சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. தாகம் இல்லாவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் குடிப்பது அவசியம். நீரிழப்பை (Dehydration) தவிர்க்க இளநீர், மோர், பதநீர் மற்றும் பழச்சாறுகளை அருந்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பருத்தி ஆடைகளை (Cotton clothes) அணிவது உடல் வெப்பத்தைத் தணிக்க உதவும். வெளியில் செல்லும்போது குடை அல்லது தொப்பி அணிவது அவசியம் என பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.
மழை எச்சரிக்கை
இந்நிலையில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதாவது சுமார் 1.5 கிமீ உயரத்தில், வடகிழக்கு மத்தியப் பிரதேசம் முதல் மன்னார் வளைக்குடா வரை விதர்பா, மரத்வாடா, உள் கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 22 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகள் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற இடங்களான தமிழகம் மற்றும் புதுச்சேயில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வெயில் அதிகரிக்கும்
இன்று முதல் 20ம் தேதி வரை உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும் அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மக்களுக்கு எச்சரிக்கை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசெளகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

