நாளை முதல் 15ம் தேதி வரை உஷார் மக்களே.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை!
Tamilnadu Weather: வரும் நாட்களில் வெப்பநிலை 2° செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

குளிர்ச்சியை தரும் திடீர் மழை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. பல்வேறு இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர். அப்படி இருந்த போதிலும் அவ்வப்போது ஒரு சில இடங்களில் மழை பெய்து குளிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் வரும் நாட்களில் வெயில் சுட்டெரிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
அதாவது தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற இடங்களில் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல் 13 முதல் 16 வரை தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
வெப்பநிலை அதிகரிக்கும்
இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும். அதேபோல் நாளை முதல் 15 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
தலைநகரை தெறிக்க விடும் வெயில்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

