- Home
- Tamil Nadu News
- சரணடைய 4 வாரம் அவகாசம் வேண்டும்! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அஸ்வத்தாமன் பரபரப்பு மனு!
சரணடைய 4 வாரம் அவகாசம் வேண்டும்! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அஸ்வத்தாமன் பரபரப்பு மனு!
நீதிமன்றம் ஜாமீன் பெற்ற அஸ்வத்தாமன், அஞ்சலை, ஹரிஹரன் உள்பட 12 பேருக்கும் ஜாமீன் ரத்து செய்து உத்தரவிட்டார். இவர்கள் அனைவரும் மார்ச் 6ம் தேதி சரண் அடைய வேண்டும் என உத்தரவிட்டார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக பிரபல ரவுடி நாகேந்திரன், அவருடைய மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் திருவேங்கடம் என்பவர் மட்டும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
முக்கிய குற்றவாளி நாகேந்திரன்
மேலும் சம்போ செந்தில், மொட்டை கிருஷ்ணன் உள்ளிட்ட இரண்டு பேர் தலைமறைவாக இருந்து வருகின்றனர். இந்த வழக்கில் ஸ்கெட்ச் போட்டு கொடுத்த முக்கிய குற்றவாளியான நாகேந்திரன் சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
12 பேருக்கு நிபந்தனை ஜாமீன்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. இதனிடையே இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான அஸ்வத்தாமன், அஞ்சலை, ஹரிஹரன், ஆற்காடு சுரேஷ் மனைவி பொற்கொடி, அப்பு, முகிலன் உள்ளிட்ட 12 பேருக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ஜாமீனை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மற்றும் காவல்துறை தரப்பில் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜாமீன் பெற்ற அஸ்வத்தாமன், அஞ்சலை, ஹரிஹரன், அப்பு உள்பட 12 பேருக்கும் ஜாமீன் ரத்து செய்து உத்தரவிட்டார். இவர்கள் அனைவரும் மார்ச் 6ம் தேதி சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என உத்தரவிட்டார்.
அஸ்வத்தாமன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
இந்நிலையில் சரணடைய 4 வார கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரி குற்றம் சாட்டப்பட்டுள்ள அஸ்வத்தாமன், ஹரிகரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். அதில், ஜாமீனை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதால் அதற்கு வழக்கறிஞரை நியமித்து அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டியுள்ளதால் சரணடைவதற்கு நான்கு வாரகால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

