பாஜக தலைவர் பதவியை இழந்த அண்ணாமலை என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா.?
தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், அண்ணாமலை ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு வருகிறார். திருவண்ணாமலை கோயிலில் தியானம் செய்த அவர், தனது எதிர்கால அரசியல் பணி குறித்த கேள்விக்கு மழுப்பலாக பதிலளித்தார்.

தமிழக அரசியல் களத்தில் பாஜக
மத்தியில் பாஜக 3வது முறையாக தொடர்ந்து ஆட்சி அமைத்து சாதித்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் ஆட்சியை பிடித்துள்ளது. அந்த வகையில் தென் மாநிலங்களான தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கால் பதிக்க திட்டமிட்டது.
இதற்காக பல்வேறு யுக்திகளை ஆராய்ந்தது. அந்த வகையில் தமிழகத்தில் பாஜக மாநில தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையை நியமித்தது. மத்திய பாஜகவின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் தமிழகம் முழுவதும் பாஜகவை கொண்டு சென்றார். அண்ணாமலையின் அதிரடி அரசியலால் இளைஞர்கள் அவர் பக்கம் திரும்பினர்.
அண்ணாமலையின் அதிரடி அரசியல்
திமுகவிற்கு கடும் போட்டியளித்த அண்ணாமலை கூட்டணி கட்சியான அதிமுகவையும் எதிர்த்தார். இதனால் கூட்டணி முறிந்து கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் பாஜக தோல்வி அடைந்தது. இந்த நிலையில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை பாஜக தலைமை கையில் எடுத்துள்ளது.
எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அண்ணாமலை மாநில தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாஜக மாநில தலைவராக நயினார்
இந்த நிலையில் பரபரப்பான அரசியலில் ஈடுபட்டு வந்த அண்ணாமலை, அமைதி தேடி ஆன்மிக பயணம் மேற்கொண்டு வருகிறார். இமயமலை முதல் திருவண்ணாமலை கோயில் வரை சென்று தியானத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று திருவண்ணாமலை கோயிலில் தியானத்தில் அண்ணாமலை ஈடுபட்டார். இதனை தொடர்ந்து கோயிலில் இருந்து வெளியே வந்தவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம் மத்திய பொறுப்பு எப்போது கிடைக்கும் என கேள்வி கேட்கப்பட்டது.
அண்ணாமலை என்ன செய்கிறார்.?
இதற்கு பதில் அளித்த அவர், ஆடு, மாடோடு இருக்கிறேன். விவசாயம் பார்கிறேன். நல்லா இருக்கிறேன். நேரம் கிடைத்தால் கோயிலுக்கு போகிறேன். இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் சுற்றுவதற்கு ஒரு வாய்ப்பு. கட்சி சொல்லும் வேலையை பார்க்கிறேன்.
இங்க போகனும், அங்கே போகனும் என தவிர்த்து நிம்மதியாக இருக்கிறேன். வீட்டிற்கு வெளியே மோர் வைத்து மக்களுக்கு வழங்கி வருகிறேன். தேவையில்லாத வேறு வேலையைப் பார்க்காமல் என்னுடையப் பணியை சந்தோஷமாக செய்கிறேன்.
குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கேன்
புத்தகங்கள் படிக்க நிறைய நேரம் கிடைக்கிறது. குழந்தைகளோடு இருக்க நேரம் கிடைக்கிறது. அம்மா, அப்பாவோடு சந்தோஷமாக இருக்கிறேன். வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன். இதிலேயே பயணிக்க வேண்டும் என விரும்பவில்லை. ஒரு தொண்டனாக கட்சிக்கு பணி செய்து வருகிறேன் என தெரிவித்தார்.

