தமிழகத்தில் அனைத்து மாணவர்களின் கல்விக் கடனும் ரத்தாகுமா? அண்ணாமலை கேள்வி
தமிழக அரசு ரூ.48.95 கோடி கல்விக் கடனைத் தள்ளுபடி செய்துள்ளது. ஆனால், மொத்த கல்விக் கடன் நிலுவை ரூ.16,302 கோடியாக உள்ள நிலையில், இந்தத் தள்ளுபடி போதுமானதா என்று பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக மாணவர்களின் அனைத்து கல்வி கடன் ரத்து.?
உயர்கல்வி படிக்க மாணவர்களுக்கு போதிய நிதி இல்லாத காரணத்தால் வங்கிகள் கல்வி கடன் வழங்கி வருகிறது. அந்த வகையில் அனைத்து மாணவர்களுக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் உட்பட அனைத்து படிப்புகளுக்கும் கடன் உதவி வழங்கப்பட்டது.
அதன் படி வழங்கப்பட்ட கல்விக் கடன்களில் ரூ.48.95 கோடி நிலுவைத் தொகையினை மாணாக்கர்களிடமிருந்து வசூலிக்க இயலாத காரணத்தால் அந்த கல்வி கடனை தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
48.95 கோடி கல்வி கடனை ரத்து செய்வதால் என்ன பயன்.?
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை, தமிழகத்தின் கல்விக் கடன் நிலுவை மொத்தம் ரூ. 16,302 கோடி. இந்த நிலையில் வெறும் ரூ.48.95 கோடியை மட்டும் ரத்து செய்வதால் யாருக்கு என்ன பயன்? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக தேர்தல் வாக்குறுதி எண் 159ல், மாணவர்களின் கல்விக் கடனை தமிழக அரசே திருப்பிச் செலுத்தும் என்று கூறி நான்கு ஆண்டுகள் ஆகின்றன.
திமுகவின் அறிவிப்பு என்ன ஆச்சு.?
திமுகவின் இந்த வாக்குறுதியை நம்பி, கல்விக் கடனைத் திரும்பச் செலுத்தாமல், கடந்த 2023 ஆம் ஆண்டு, வாராக்கடனாக, ரூ. 4,124 கோடி அறிவிக்கப்பட்டு, அதனால் வழக்குகளைச் சந்தித்தும், சுயதொழில் தொடங்க வங்கிக் கடன் கிடைக்காமலும், மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஏராளம். தற்போது, கடனை வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காண முடியாததால் கல்விக் கடனை ரத்து செய்கிறோம் என்று திமுக அரசு காரணம் கூறியிருப்பது நகைப்பிற்குரியது.
இளைஞர்கள் எதிர்காலம் பாழாக வேண்டுமா?
கல்விக் கடனை ரத்து செய்வோம் என்ற திமுகவின் வாக்குறுதியை நம்பிக் காத்துக்கொண்டிருந்த மாணவ சமுதாயம், ஓடி, ஒளிந்து, தலைமறைவானால்தான் கடனை ரத்து செய்வோம் என்ற தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது திமுக என விமர்சித்துள்ளார். நாட்டிலேயே கல்விக் கடன் மிக அதிகமாக நிலுவையில் இருப்பது தமிழகத்தில்தான்.
இதற்குக் காரணம், இது போன்ற பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து, மாணவர்களையும், பெற்றோர்களையும் பலப்பல தேர்தல்களாகத் தொடர்ந்து ஏமாற்றி வருவதுதான். திமுகவின் பொய்களுக்கு, இளைஞர்கள் எதிர்காலம் பாழாக வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
கல்வி கடன் ரத்து செய்திடுக
அந்த வகையில் உடனடியாக, திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதன்படி, தமிழக மாணவர்கள் அனைவரின் ஒட்டுமொத்தக் கல்விக் கடன்களையும் ரத்து செய்து, தமிழக அரசே திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும், குறிப்பிட்ட சமூக மாணவர்களுக்கே கல்விக் கடன் ரத்து என்று, மாணவ சமுதாயத்திடம், ஜாதிப் பாகுபாடைத் தூண்டும் விதமாகச் செயல்பட வேண்டாம் என்றும் வலியுறுத்துவதாக அண்ணாமலை அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.