- Home
- Tamil Nadu News
- அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நேரடியாக செயல்படுத்தனும்.! முதலமைச்சருக்கு பறந்த அறிக்கை
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நேரடியாக செயல்படுத்தனும்.! முதலமைச்சருக்கு பறந்த அறிக்கை
அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து தமிழக அரசு குழு அமைத்துள்ளது. இது வெறும் காலம் கடத்தும் செயல்தான் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கிடையே அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நேரடியாக செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நேரடியாக செயல்படுத்தனும்
அரசு ஊழியர்கள் தொடர் கோரிக்கையாக இருப்பது பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது தான். அந்த வகையில் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், பணியின் போது ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ஓய்வூதியம் பிடித்தம் செய்யப்படாது. முழு ஓய்வூதியத் தொகையையும் அரசே வழங்கும்.
ஆனால் மத்திய மாநில அரசுக்கு இதன் காரணமாக பல ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவாகி வருவதாக கூறி பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறுத்தியுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து போராடி வருகின்றனர்.
பழைய ஓய்வூதிய திட்டம்- அன்புமணி
அந்த வகையில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு வழங்கப்படும் பழைய ஓய்வூதியத் திட்டம். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட தமிழக அரசு ஒரு குழு அமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வுதியத் திட்டத்தை செயல்படுத்தாமல் தவிர்ப்பதற்கான ஏமாற்று வேலை தான் இக்குழு என்பதில் ஐயமில்லை என கூறியுள்ளார்.
போராடி வரும் அரசு ஊழியர்கள்
மத்திய அரசுக்கு முன்பாக தமிழ்நாட்டில் 2003&ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலே புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டத்தின்படி அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் கிடைக்காது என்பதால், அந்த முறையை மாற்றி விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர்.
ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரும் அரசுகள் ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தாமல் மறுப்பதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர்.
7 மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம்
இந்தியாவில் இராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஷ்கார், பஞ்சாப், கர்நாடகம், இமாலயப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது. அந்த மாநிலங்கள் அனைத்தும் தமிழ்நாட்டை விட மிகவும் மோசமான நிதிநிலை கொண்ட மாநிலங்கள் தான். அதேபோல், மத்திய அரசும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்திருக்கிறது. தமிழ்நாடு அரசு நினைத்தால் நடப்பு மாதத்திலிருந்தே பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த முடியும். ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு மனம் தான் இல்லை.
ஆய்வு செய்ய ஏற்கனவே அமைத்த குழு நிலை என்ன.?
பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிந்துரைப்பதற்காக குழு அமைக்கிறோம் என்று காலம் கடத்துவது தமிழக அரசுக்கு புதிது அல்ல. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே இத்தகைய நாடகத்தை தமிழக ஆட்சியாளர்கள் தொடர்ந்து அரங்கேற்றிக் கொண்டு தான் இருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிந்துரைக்க 2016ம் ஆண்டு பிப்ரவரியில் இ.ஆ.ப. அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் குழு ஒன்றை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அமைத்தார். 2016 தேர்தல் முடிந்து ஜெயலலிதா அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து காலமாகும் வரை அந்தக் குழு அதன் பணியை தொடங்கவில்லை.
எந்த முதலமைச்சரும் நடவடிக்கை எடுக்கவில்லை
அதன்பின்னர் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி மூத்த இஆப அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் மீண்டும் ஒரு வல்லுனர் குழு இதே காரணத்திற்காக அமைக்கப்பட்டது. அந்தக் குழு அதன் அறிக்கையை 27-.11.2018 அன்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் தாக்கல் செய்தது. ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதனால் பழைய ஓய்வூதியத்திட்டம் கனவாகவே தொடர்ந்தது. 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின், கடந்த 4 ஆண்டுகளை கடத்தி விட்டு, இப்போது குழு அமைக்கும் பழைய நாடகத்தையே தூசு தட்டி அரங்கேற்றியுள்ளார்.
பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்திடுக
தமிழக அரசால் அமைக்கப்பட்டிருக்கும் குழு தமிழ்நாட்டில் எத்தகைய ஓய்வூதியத் திட்டத்தை செய்லப்டுத்தலாம் என்பது குறித்த அதன் அறிக்கையை தாக்கல் செய்ய 9 மாதம் அவகாசம் அளிக்கப் பட்டுள்ளது. அந்த 9 மாத காலக் கெடு முடிவடையும் நிலையில், அதற்கான கெடு மேலும் 3 மாதங்களோ, 6 மாதங்களோ நீட்டிக்கப்படும். அதற்குள்ளாக திமுக அரசின் பதவிக்காலமும் நிறைவடைந்து விடும். அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கடந்த காலங்களைப் போல ஏமாற்றம் தான் மிஞ்சும்.
பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பரிந்துரைப்பதற்காக குழு அமைப்பதெல்லாம் ஏமாற்று வேலை தான். எனவே, குழு அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு நேரடியாக செயல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், தமிழ்நாடு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஏற்கனவே அறிவித்ததைப் போன்று, 2026 தேர்தலில் திமுகவை எதிர்க்கட்சியாக்குவர் என்பது உறுதி என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.