- Home
- Tamil Nadu News
- டாஸ்மாக் பணம் ரூ.1000 கோடி யாருக்கு போனது? ED கொடுத்த லிஸ்ட்- களத்தில் இறங்குமா சி.பி.ஐ.? அன்புமணி
டாஸ்மாக் பணம் ரூ.1000 கோடி யாருக்கு போனது? ED கொடுத்த லிஸ்ட்- களத்தில் இறங்குமா சி.பி.ஐ.? அன்புமணி
டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ விசாரணைக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 40% மது விற்பனை கணக்கில் காட்டப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Anbumani demands CBI probe into TASMAC scam : தமிழ்நாட்டில் மது வணிகத்துக்கு பொறுப்பு வகிக்கும் டாஸ்மாக நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பல்வேறு மது ஆலைகளில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனைகளில் குறைந்தது ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள 5 தனியார் மது ஆலைகளில் கடந்த 7&ஆம் தேதி தொடங்கி 3 நாள்களுக்கு அமலாக்கத்துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் அவற்றின் விவரங்கள் குறித்த செய்திகள் வெளியாகி வருகின்றன.
டாஸ்மாக் 1000 கோடி ஊழல்
அவற்றில் குறைந்தது ரூ.1000 கோடிக்கு ஊழல் நடந்திருப்பது தெரிய வந்துள்ளதாகவும், இது டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற ஊழல் பெருங்கடலின் ஒரு துளி தான் என்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது. இது தவிர தமிழகத்தின் மது விற்பனையில் 40% கணக்கில் காட்டப்படாமல் விற்பனை செய்யப்படுவதற்கான ஆவணங்களும் கிடைத்திருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது.
ஊழல் பணம் ரூ.1000 கோடியில் சிறு பகுதி மட்டும் தான் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு சென்றிருப்பதாகவும், மீதமுள்ள பணம் யாருக்கு சென்றது என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியதாக தெரியவந்துள்ளது.
ரூ.3650 கோடி வரை ஊழல்
டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கும் மேலாக மதுப்புட்டிகளுக்கு ரூ.10 முதல் ரூ.50 வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த வகையில் மட்டும் தினமும் ரூ.10 கோடி வீதம் ஆண்டுக்கு ரூ.3650 கோடி வரை ஊழல் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
இது தவிர மது ஆலைகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் மது வகைகளுக்கு பெட்டிக்கு ரூ.50 வீதம் கையூட்டாக பெறப்படுவதாகவும், இந்த வகையில் மட்டும் ஆண்டுக்கு ரூ.500 கோடி வரை ஆட்சியாளர்களுக்கு கிடைப்பதாகவும் குற்றச்சாட்டு உண்டு. இது குறித்து விசாரிக்க கடந்த காலங்களில் பா.ம.க. பல முறை வலியுறுத்தியிருக்கிறது.
கலால், விற்பனை வரி செலுத்தவில்லை
இவை அனைத்துக்கும் மேலான குற்றச்சாட்டு என்னவென்றால், தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் மது வகைகளில் 50 விழுக்காட்டுக்கு கலால் வரியும், விற்பனை வரியும் செலுத்தப்படுவதில்லை என்பது தான். பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த குற்றச்சாட்டை நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர் பழனிவேல்ராஜன் அவர்களும் உறுதி செய்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாக 4,829 மதுக்கடைகள் உள்ளன. ஆனால், 20 ஆயிரத்திற்கும் கூடுதலான சந்துக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு தான் வரி செலுத்தப்படாத மதுப்புட்டிகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகின்றன.
உண்மையும் வெளிவர வாய்ப்பில்லை
சந்துக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பா.ம.க. பலமுறை வலியுறுத்தியும் கூட அவற்றின் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாக தமிழக அரசின் கையூட்டுத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் பதிவு செய்துள்ள மூல வழக்கின் அடிப்படையில் தான் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது. ஆனால், அந்த மூல வழக்கில் தமிழக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால் டாஸ்மாக் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த எந்த உண்மையும் வெளிவர வாய்ப்பில்லை.
சிபிஐ விசாரணை நடத்திடுக
அமலாக்கத்துறை சோதனையில் தெரியவந்துள்ள ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழலால் பயனடைந்தவர்கள் யார், யார்? என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டியதும், அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டியதும் அவசியம் ஆகும். எனவே, டாஸ்மாக் ஊழல்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.