- Home
- Tamil Nadu News
- முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைக்கு மேல் கத்தி! இனி தப்பவே முடியாதா? நீதிமன்றம் அதிரடி!
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைக்கு மேல் கத்தி! இனி தப்பவே முடியாதா? நீதிமன்றம் அதிரடி!
சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக 35.79 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். அதிமுகவில் தற்போது புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளராகவும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார். சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோதே விஜயபாஸ்கர் மீது திமுக குட்கா உள்பட பல்வேறு ஊழல் புகார்களை முன்வைக்கப்பட்டது. குட்கா விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடடைபெற்று வருகிறது.
இதனிடையே 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக அரசு வந்தது. 2021 அக்டோபர் மாதம் விஜயபாஸ்கர் தொடர்புடைய 56 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடியாக சோதனை நடத்தியது. இரண்டு நாட்கள் வரை நடந்த சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் பணம், 4.87 கிலோ தங்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து, வருமானத்துக்கு அதிகமாக 35.79 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக சி.விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. சொத்துக் குவிப்பு வழக்கில் விஜயபாஸ்கருக்கு எதிராக கடந்த மே மாதம் 216 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன் 10,000 பக்கங்கள் கொண்ட 800 சொத்து ஆவணங்களின் விவரங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இதுதொடர்பான வழக்கு மீண்டும் இன்று புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஆஜராகததால் விசாரணை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.