- Home
- Tamil Nadu News
- TN Assembly Elections: தமிழக தேர்தலில் கள்ள ஓட்டு! 25 வெளிநாட்டவர்கள் ஏர்போர்ட்டில் கைது! சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்
TN Assembly Elections: தமிழக தேர்தலில் கள்ள ஓட்டு! 25 வெளிநாட்டவர்கள் ஏர்போர்ட்டில் கைது! சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்
TN Assembly Elections: தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு, வெளிநாட்டு குடியுரிமை பெற்று சட்டவிரோதமாக வாக்களித்ததாக 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் விமான நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பிடிபட்டனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக மும்முறை வெளிநாடுகளில் வசித்த தமிழர்கள் பலர் ஆர்வத்துடன் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு வருகை புரிந்து வாக்களித்தனர். இதில், முதல் முறையாக தேர்தலை சந்தித்த தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று அசத்தியது.

பெருபான்மைக்கு தேவையான 118 இடங்களை பெற முடியாத நிலையில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், இந்திய முஸ்லிம் லீக் ஆதரவை பெற்று தவெக ஆட்சியமைத்துள்ளது. இரண்டு பிரிவாக உள்ள அதிமுகவில் 25 எம்எல்ஏக்களை கொண்ட சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பினர் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். மற்றொரு தரப்பான இபிஎஸ் தரப்பு விஜய்க்கு எதிராக 22 பேர் வாக்களித்தனர். அரசுக்கு ஆதரவாக 144 பேரும், எதிராக 22 பேரும் வாக்களித்தனர். 5 பேர் நடுநிலை வகித்தனர். இதில் திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் ஏப்ரல் 23க்குப் பின் வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு சோதனைகள் அறிவிக்கப்பட்டன. கைவிரலில் மை உள்ளதா என பரிசோதிக்கப்பட வேண்டும். வெளிநாட்டு குடியுரிமை உள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டால் காவல்துறையிடம் ஒப்படைக்க ஆணையம் உத்தரவிட்டது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை விமான நிலையங்களில் சோதனைகள் தொடங்கப்பட்டன.
இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் வெளிநாட்டு குடியுரிமைப் பெற்று சட்டவிரோதமாக வாக்களித்த 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கைவிரலில் வாக்களித்த மை அடையாளம் இருந்தது. ஆஸ்திரேலியா, கனடா, இலங்கை குடியுரிமை பெற்றவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தன. கடந்த மே 7ம் தேதி முதல் 14ம் தேதி வரைசென்னை விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில், வெளிநாட்டு குடியுரிமை கொண்ட 4 பெண்கள் உட்பட மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தற்போது சட்டவிரோதமாக ஓட்டு போட்டவர்களின் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

