- Home
- Tamil Nadu News
- மதுரை
- Madurai Meenakshi Temple: தேவாரப் பாடல்கள் முழங்க... 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
Madurai Meenakshi Temple: தேவாரப் பாடல்கள் முழங்க... 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
Meenakshi Amman Temple Maha Kumbabhishekam : உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Meenakshi Amman Temple Maha Kumbabhishekam
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (செப்டம்பர் 17, 2026) மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விழாவைக் காண தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மதுரையில் திரண்டனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அதிகாலை முதலே கோயிலில் சிறப்பு பூஜைகள் தொடங்கின. அதிகாலை 3.35 மணி முதல் 5.45 மணி வரை விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், 12-ம் கால யாகம், திரவ்யாஹுதி, பூர்ணாஹுதி, தீபாராதனை, யாத்ராதானம் உள்ளிட்ட பல்வேறு சடங்குகள் நடைபெற்றன.
இதையடுத்து புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள் கோயில் பிரகாரத்தைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் காலை 7.40 மணிக்கு நடைபெற்றது. கோயிலின் தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்களுக்கு ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது.
மீனாட்சி, சுந்தரேஸ்வரருக்கு கும்பாபிஷேகம்
ராஜகோபுரங்கள் மற்றும் தங்க விமானங்களுக்கான கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து, காலை 7.55 மணிக்கு மூலவர் ஸ்ரீ மீனாட்சி அம்மனுக்கும், 8.10 மணிக்கு ஸ்ரீ சுந்தரேஸ்வரர் சுவாமிக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவர்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்ட பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. தவத்திரு குன்றக்குடி அடிகளார் முன்னிலையில் காலை 7.40 மணி முதல் 8.10 மணி வரை திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. விழா நடைபெற்ற நேரம் முழுவதும் கோயில் ஓதுவார்கள் பாடிய தமிழ் தேவாரப் பாடல்கள் கோயில் வளாகம் முழுவதும் ஒலித்தன. இதனால் கும்பாபிஷேக நிகழ்வு பக்தி நிறைந்த சூழலில் நடைபெற்றது.
பக்தர்களுக்கு பிரசாதம்
கும்பாபிஷேகத்தின் முக்கிய சடங்குகள் நிறைவடைந்த பின்னர், விழாவைக் காண வந்திருந்த பக்தர்களுக்கு விபூதி மற்றும் திருவமுது பிரசாதம் வழங்கப்பட்டது. மதுரையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், தென்னிந்தியாவின் முக்கியமான வரலாற்று மற்றும் கட்டிடக்கலைச் சிறப்புமிக்க திருத்தலங்களில் ஒன்றாகும். மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரர் சுவாமிக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்தக் கோயிலின் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றதால், பக்தர்கள் மத்தியில் சிறப்பு எதிர்பார்ப்பு நிலவியது.
படையெடுத்து வந்த பக்தர்கள்
இதையொட்டி கோயில் வளாகத்திலும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. பெருமளவில் திரண்ட மக்களைக் கட்டுப்படுத்தவும், விழா நிகழ்வுகள் தடையின்றி நடைபெறவும் அதிகாரிகள் சார்பில் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசல் மேலாண்மைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த மகா கும்பாபிஷேகம், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த திருவிழாவாக அமைந்துள்ளது.
மதுரையைச் சுற்றியுள்ள பிரம்மாண்டக் கோயில்கள்! ஒரே பயணத்தில் தரிசிக்க முழுமையான ஆன்மீக வழிகாட்டி!

