டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறும் விராட் கோலி? பிசிசிஐயிடம் சொன்னது என்ன? என்ன நடந்தது?
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக பிசிசிஐயிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Virat Kohli planning to retire from Test cricket
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிந்த பிறகு இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்று 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ விரைவில் அறிவிக்க உள்ள நிலையில், சில நாட்களுக்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா அறிவித்தார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மாவை ஓரம்கட்ட பிசிசிஐ முடிவு செய்திருந்த நிலையில், இதை முன்கூட்டியே அறிந்து அவர் இந்த முடிவை எடுத்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறும் விராட் கோலி
இந்நிலையில், உலகின் தலைநிறந்த வீரரான விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற பிசிசிஐயிடம் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா படுமோசமாக தோற்ற நிலையில், விராட் கோலின் பேட்டிங் பார்ம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதேபோல் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் இந்த நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காக விராட் கோலி ஓய்வு முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
விராட் கோலி முடிவை ஏற்காத பிசிசிஐ
ஆனாலும் பிசிசிஐ விராட் கோலி முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கோலியிடம் கேட்டதாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே ரோகித் சர்மா டெஸ்ட்டில் இருந்து விலகிய நிலையில், விராட் கோலியும் விலகினால் அது இந்திய அணியில் அனுபவ வீரர்களுக்கு பெரும் பற்றாக்குறையை ஏற்படுத்தும். ஆகவே ஓய்வு முடிவை மாற்றும்படி பிசிசிஐ விராட் கோலியிடம் சொன்னதாக கூறப்படுகிறது.
இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் படுதோல்விக்கு பிறகு பிசிசிஐ ரோகித் சர்மா, விராட் கோலி இருவருக்கும் கடுமையான அழுத்தங்களை கொடுத்தது. இருவரும் கண்டிப்பாக உள்நாட்டு தொடர்களில் விளையாட வேண்டும் என உத்தரவிட்டது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கோலி பேட்டிங்கில் அசத்தினால் பிரச்சனை இல்லை. ஆனால் ஒருவேளை பேட்டிங்கில் சொதப்பினால் பிசிசிஐ தன் மீது விமர்சனம் வைப்பதையோ, அழுத்தம் கொடுப்பதையோ விராட் கோலி விரும்பவில்லை. இதையறிந்தே ஓய்வு முடிவை அவர் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விராட் கோலி முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி
ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் சரியாக விளையாட முடியாவிட்டாலும் விராட் கோலி மிகச்சிறந்த வீரர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. டெஸ்ட்டில் கோலியின் பேட்டிங் க்ளிக்கானால் அது இங்கிலாந்துக்கு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரியும். இதனால் அவர் 2025 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விராட் கோலி ஓய்வு முடிவை எடுத்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.