நடராஜனை 2017ல் நான் KXIP அணியில் எடுத்தபோது நிறைய பேர் என்னை திட்டுனாய்ங்க; இன்னக்கி புகழ்றாய்ங்க: சேவாக்
நடராஜனை முதன்முதலில் தான் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் எடுத்தபோது பலர், நடராஜனின் தேர்வு குறித்து கேள்வியெழுப்பியதாகவும், ஆனால் அவர் மீது நம்பிக்கை வைத்து அவரை எடுத்ததற்காக பெருமைப்படுவதாகவும் சேவாக் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் அரங்கிலும் இந்தியாவிலும் ஹாட் டாபிக் தமிழகத்தை சேர்ந்த இடது கை ஃபாஸ்ட் பவுலர் டி.நடராஜன் தான். ஐபிஎல்லில் இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணிக்காக மிக அருமையாக வீசி தனது துல்லியமான யார்க்கர்களின் மூலம், ஆட்டத்தின் முக்கியமான நேரங்களில் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு உதவினார்.
ஐபிஎல் 13வது சீசனில் 16 போட்டிகளில் ஆடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வீழ்த்திய விக்கெட்டுகள் மிக அதிகம் இல்லையென்றாலும், அந்த விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட சூழல், ஆட்டத்தில் ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் அவை மிக முக்கியமான விக்கெட்டுகள்.
ஐபிஎல்லில் அபாரமாக பந்துவீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நடராஜன், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்ததுடன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆடும் லெவனிலும் இடம்பிடித்து, 10 ஓவர்கள் வீசி 70 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
ஆஸ்திரேலியாவில் அறிமுக போட்டியிலேயே அசத்திய டி.நடராஜன் ஹாட் டாபிக்காக உருவெடுத்துள்ள நிலையில், அவரை முதன்முதலில், 2017 ஐபிஎல்லில் ரூ.3 கோடி கொடுத்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் எடுத்த சேவாக், அவரது வளர்ச்சி குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய சேவாக், 2017 ஐபிஎல்லில் அவரை நான் முதலில் எடுத்தபோது, நிறைய பேர் இவருக்கு ஏன் இவ்வளவு தொகை கொடுத்து எடுத்தீர்கள் என்று கேள்வியெழுப்பினர். அந்த சீசனில் பஞ்சாப் அணியில் நிறைய தமிழ்நாட்டு வீரர்கள் இருந்தார்கள். அவர்கள், நடராஜனை பற்றி கூறியதுடன், துல்லியமான யார்க்கர்களையும் டெத் ஓவர்களில் அருமையாகவும் வீசக்கூடிய பவுலர் என்று என்னிடம் கூறினர். அதன்பின்னர் அவரது பவுலிங் வீடியோக்களை பார்த்து, அவரது திறமையை அறிந்துகொண்ட பின்னர் தான் அவரை அணியில் எடுத்தேன். ஆனாலும் உள்நாட்டு போட்டிகளில் கூட ஆடிராத வீரரை, வெறும் தமிழ்நாடு பிரீமியர் லீக்கை மட்டும் வைத்து எப்படி எடுத்தீர்கள் என்று பலர் கேட்டனர்.