- Home
- Sports
- Sports Cricket
- ரஜினியின் வெறித்தனமான ரசிகர்! விஜய் ஸ்டைலில் கொண்டாட்டம்! வெங்கடேஷ் ஐயர் சொன்னது என்ன தெரியுமா?
ரஜினியின் வெறித்தனமான ரசிகர்! விஜய் ஸ்டைலில் கொண்டாட்டம்! வெங்கடேஷ் ஐயர் சொன்னது என்ன தெரியுமா?
Venkatesh Iyer: சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகரான ஆர்சிபி வீரர் வெங்கடேஷ் ஐயர், விஜய் ஸ்டைலில் தனது அரைசதத்தை கொண்டாடினார். வெங்கடேஷ் ஐயர் சொன்னது என்ன? என்பது குறித்து பார்ப்போம்.

ஆர்சிபி அசத்தல் வெற்றி
தர்மசாலாவில் உள்ள HPCA ஸ்டேடியத்தில் நடந்த இந்த ரன் குவிப்பு போட்டியில், RCB அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் PBKS அணியை வீழ்த்தியது. இதன் மூலம், 2026 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையை RCB பெற்றது. இந்த போட்டியில் ஆர்சிபி அணிக்காக இம்பேக் வீரராக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 40 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 73 ரன்கள் அடித்து மேட்ச் வின்னராக ஜொலித்தார்.
வெங்கடேஷ் ஐயர் விஜய் ஸ்டைலில் கொண்டாட்டம்
இந்த போட்டியில் பஞ்சாப் வீரர் லோகி பெர்குசன் வீசிய பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டு அரைசதத்தை கடந்த வெங்கடேஷ் ஐயர், கைகளை உயர்த்தி சைகையை காட்டி கொண்டாடினார். இந்த ஸ்டைல் அப்படியே நடிகர் விஜய் (தற்போதைய தமிழக முதல்வர்) நடித்த 'மெர்சல்' திரைப்படத்தில் வரும் மாஸ் மேனரிசத்தை நினைவுபடுத்துவதாக அமைந்தது. இதனால், தளபதி விஜய்யின் ரசிகர்கள் "ஐபிஎல் அரங்கில் விஜய் ஃபீவர்" என இதைக் கொண்டாடி, வீடியோக்களை வைரல் செய்து வருகின்றனர்.

ஆர்சிபி அணி சொன்னது என்ன?
அதே நேரத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) நிர்வாகம் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில், இது ஒரு "இம்பாக்ட் பிளேயர் கொண்டாட்டம்" (Impact Player Celebration) என்று குறிப்பிட்டிருந்தது. அதாவது நடுவர்கள் 'இம்பாக்ட் பிளேயர்' மாற்றத்தைக் குறிக்க பயன்படுத்தும் சைகையை அவர் செய்ததாக ஒரு தரப்பு கூறுகிறது. ஆனாலும் பார்ப்பதற்கு அது அச்சு அசலாக விஜய் பாணியில் இருந்ததால் ரசிகர்கள் இதனைத் தங்களுக்கு சாதகமாக கொண்டாடி வருகின்றனர்.
ரஜினியின் தீவிரமான ரசிகர்
வெங்கடேஷ் ஐயர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகர் ஆவார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் குடும்ப பின்னணி கொண்ட வெங்கடேஷ் ஐயர், சிறுவயது முதலே ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக வளர்ந்தவர். ரஜினியின் திரைப்படங்களை ஒருமுறை கூட தவறவிடாமல் பார்க்கும் வழக்கம் கொண்டவர். அவரது "என் வழி தனி வழி" என்ற பஞ்ச் வசனத்தைத்தான் தனது வாழ்க்கையின் தாரக மந்திரமாகப் பின்பற்றுவதாக அவரே பேட்டிகளில் கூறியுள்ளார். இதற்கு முன்பு விஜய் ஹசாரே தொடரில் ஒரு போட்டியில் சதம் அடித்த போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ஐகானிக் சல்யூட் (Salute) ஸ்டைலைச் செய்து தனது சதத்தை ரஜினிக்கு அர்ப்பணித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெங்கடேஷ் ஐயர் சொன்னது என்ன?
இதற்கிடையே நேற்றைய போட்டிக்கு பிறகு பேசிய வெங்கடேஷ் ஐயர், ''இன்றைக்குத்தான் எனக்கு முழுமையாக பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அதோடு, அணிக்கு இரண்டு புள்ளிகள் கிடைத்ததும் முக்கியம். நான் விளையாட விரும்பியதால் எனக்கு விரக்தி இல்லை என்று சொன்னால் அது பொய்யாக இருக்கும். ஆனால் இது ஒரு சாம்பியன் அணி, அதன் காம்பினேஷனை மாற்றுவது எப்போதும் சரியல்ல என்பதை நான் புரிந்துகொள்கிறேன்'' என்று கூறியிருந்தார்.

