ஃபிட்னெஸ் இல்லாமல் வெறும் பவுலிங்கை மட்டும் வச்சு என்ன பண்றது..? அரிய வாய்ப்பை அம்போனு நழுவவிட்ட தமிழக வீரர்
ஃபிட்னெஸ் டெஸ்ட்டில் தேறாததால் இந்திய அணியில் ஆடும் வாய்ப்பை இழந்தார் தமிழகத்தை சேர்ந்த ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி.
ஐபிஎல் 12வது சீசனுக்கான ஏலத்தில் பஞ்சாப் அணியால் ரூ.8.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி ஒரேயொரு போட்டியில் மட்டுமே ஆடினார். அதன்பின்னர் பஞ்சாப் அணியால் கழட்டிவிடப்பட்ட வருண் சக்கரவர்த்தியை கேகேஆர் அணி ஏலத்தில் எடுத்து முதன்மை ஸ்பின்னராக ஆடவைத்தது. அவரும் அபாரமாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், கேகேஆர் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.
ஐபிஎல்லில் சிறப்பாக ஆடியதன் விளைவாக ஆஸி., சுற்றுப்பயணத்துக்கான இந்திய டி20 அணியில் முதல் முறையாக இடம்பெற்ற வருண் சக்கரவர்த்தி, காயம் காரணமாக அந்த வாய்ப்பை தவறவிட்டார். இதையடுத்து, இந்தியாவில் இங்கிலாந்துக்கு எதிராக நடக்கவிருக்கும் டி20 தொடருக்கான இந்திய அணியில் எடுக்கப்பட்ட வருண் சக்கரவர்த்தி, ஃபிட்னெஸ் டெஸ்ட்டில் தேறாததால், இந்த தொடரில் ஆடும் வாய்ப்பையும் தவறவிட்டார்.
தோள்பட்டை காயத்திலிருந்து மீண்ட வருண் சக்கரவர்த்தி, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடந்த யோ யோ டெஸ்ட்டில் 2 கிமீ தொலைவை நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 2 முறை ஓடமுடியாமல் தோற்றுப்போனார். ஃபிட்னெஸ் டெஸ்ட்டில் தேறாததால் அவரால் இந்திய அணியில் ஆட முடியாது.
இந்நிலையில், வருண் சக்கரவர்த்தி குறித்து டைம்ஸ் நவ்-இடம் பேசியுள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர், வருண் சர்க்கரவர்த்தி யோ யோ டெஸ்ட்டில் தேர்ச்சி பெறவில்லை. அவர் காயமடைந்திருந்தார் என்பது தெரியும். ஆனாலும் ஐபிஎல்லுக்கு பிறகு, கடந்த 5 மாதங்களாக, சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே ஆகிய தொடர்களில் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை. 5 மாதங்களாக ஒரு போட்டியில் கூட ஆடாத வீரரை எப்படி இந்திய அணியில் ஆட வைக்க முடியும்? வருண் சக்கரவர்த்தியின் தேர்வு, தேர்வாளர்களுக்கு மிகச்சிறந்த பாடம்.
இந்திய அணியால் நிர்ணயிக்கப்படும் ஸ்டாண்டர்டுகளை நிறைவேற்ற முடியாத வீரரின் பவுலிங்கை மட்டுமே வைத்து அணியில் எடுக்க முடியாது என்று அந்த பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ளார்.