#AUSvsIND இந்திய அணிக்கு அடி மேல் அடி.. 4வது டெஸ்ட்டில் நடராஜன்..!
ஆஸி.,க்கு எதிரான கடைசி(4வது) டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் நடராஜன் ஆடுவதற்கு வாய்ப்புள்ளது.
ஆஸி.,க்கு எதிராக நடந்துவரும் டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு, வீரர்களின் காயம் தொடர் சோதனையாகவும் சோகமாகவும் அமைந்துள்ளது. முதல் டெஸ்ட்டில் ஷமி, 2வது டெஸ்ட்டில் உமேஷ் யாதவ், 3வது டெஸ்ட்டில் ஜடேஜா ஆகியோர் காயமடைந்து ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர் வீதம் முக்கியமான வீரர்கள் விலகிக்கொண்டே வந்த நிலையில், அடிவயிறு வலி காரணமாக கடைசி டெஸ்ட்டில் ஆடாமல் பும்ராவும் விலகியிருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு.
3 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், தொடர் 1-1 என சமநிலையில் உள்ள நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் பிரிஸ்பேனில் நடக்கும் கடைசி டெஸ்ட்டில் நடராஜன் களமிறங்க வாய்ப்புள்ளது.
பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர் ஆகியோர் டெஸ்ட் தொடருக்கான ஃபாஸ்ட் பவுலர்களாக ஆஸி.,க்கு அழைத்து செல்லப்பட்டனர். நடராஜன் நெட் பவுலராக அணியுடன் இருந்தார். ஷமி காயமடைந்ததால் ஷர்துல் தாகூர் அணியில் சேர்க்கப்பட்டார். உமேஷ் யாதவ் காயமடைந்ததால் நடராஜனும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர்கள் இருவருக்குமே ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
3வது டெஸ்ட்டில் பும்ரா, சிராஜ், சைனி ஆகிய மூவரும் ஆடினர். ஜடேஜா காயத்தால் கடைசி டெஸ்ட்டில் ஆடாத நிலையில், பும்ராவும் ஆடவில்லை. சிராஜ், சைனி, ஷர்துல் தாகூர், நடராஜன் ஆகிய ஃபாஸ்ட் பவுலர்கள் உள்ளனர். இவர்களில் ஷர்துல் தாகூர் ஜடேஜாவிற்கு பதிலாக சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. ஏனெனில் ஷர்துல் தாகூர் நன்றாக பேட்டிங்கும் ஆடக்கூடிய ஃபாஸ்ட் பவுலர். எனவே அவர் ஜடேஜாவிற்கு பதிலாக எடுக்கப்பட்டால், பும்ராவிற்கு பதிலாக நடராஜன் எடுக்கப்பட்டே தீர வேண்டும். அந்தவகையில், நடராஜன் பிரிஸ்பேனில் நடக்கும் கடைசி டெஸ்ட்டில் கண்டிப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.