மீண்டும் களம் காண்கிறார் ரெய்னா.. செம குஷியில் ரசிகர்கள்
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்ததுடன், ஐபிஎல் 13வது சீசனிலும் ஆடிராத சுரேஷ் ரெய்னா, மீண்டும் களம் காணவுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராகவும் தோனியின் ஆஸ்தான வீரர் மற்றும் நண்பராகவும் திகழ்ந்த சுரேஷ் ரெய்னா, ஐபிஎல்லுக்கு முன், ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி தோனி ஓய்வறிவித்த அடுத்த சில நிமிடங்களிலேயே தானும் ஓய்வறிவித்தார்.
இந்திய அணிக்காக 226 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5615 ரன்களை குவித்துள்ள ரெய்னா, 18 டெஸ்ட் மற்றும் 78 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். 2011ல் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றபோது, அந்த அணியில் முக்கிய பங்காற்றியவர் ரெய்னா.
டெய்னா 33 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வறிவித்தது ரசிகர்களை அதிர்ச்சிக்கும் சோகத்திற்கும் உள்ளாக்கியது. ஐபிஎல்லிலாவது ரெய்னாவின் ஆட்டத்தை பார்க்காலமென்று காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சிஎஸ்கே அணி நிர்வாகத்துடனான கருத்து வேறுபாட்டால் திடீரென ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பிய ரெய்னா, ஐபிஎல் 13வது சீசனில் ஆடவில்லை.
இந்நிலையில், உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரில் உத்தர பிரதேச அணிக்காக ஆடவுள்ளார் ரெய்னா. வரும் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ள பயிற்சி போட்டிகளிலும் ரெய்னா ஆடவுள்ளார். ரெய்னாவை மீண்டும் களத்தில் காணவுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.