IND vs AUS: ஆட்டத்தையே தலைகீழாக திருப்பிய அந்த ஒற்றை பந்து.! அதுதான் இந்தியாவின் தோல்விக்கு காரணம் - கவாஸ்கர்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மார்னஸ் லபுஷேனுக்கு ஜடேஜா வீசிய நோ பால் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்ததுடன், இந்திய அணியின் தோல்விக்கும் காரணமாக அமைந்துவிட்டதாக சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபாரமாக ஆடி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தூர் ஆடுகளம் முதல் ஓவரிலிருந்தே ஸ்பின்னிற்கு சாதகமாக இருந்தது. இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய ஸ்பின் பவுலிங்கை திறம்பட ஆடமுடியாமல் திணறி மளமளவென ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்ஸில் வெறும் 109 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அறிமுக ஸ்பின்னர் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 197 ரன்கள் அடிக்க, 88 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 163 ரன்கள் மட்டுமே அடிக்க, 76 ரன்கள் என்ற எளிய இலக்கை அடித்து ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி பெற்ற 88 ரன்கள் முன்னிலை தான் இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது. அதற்கு, ஜடேஜா வீசிய நோ பாலும் ஒரு காரணம். மார்னஸ் லபுஷேன் களத்திற்கு வந்ததுமே ஜடேஜாவின் பந்தில் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். ஆனால் அது நோ பாலாக அமைய, லபுஷேன் தப்பித்தார். அதன்பின்னர் உஸ்மான் கவாஜாவுடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 96 ரன்களை சேர்க்க காரணமாக அமைந்தார்.
அந்த ஒரு பந்துதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்ததாக கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய கவாஸ்கர், ஜடேஜா வீசிய நோ பால் காரணமாக அதன்பின்னர் லபுஷேனும் கவாஜாவும் இணைந்து 96 ரன்களை சேர்த்தனர். இந்திய அணி மொத்தமாகவே 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. எனவே ஜடேஜா வீசிய அந்த ஒரு நோ பால் தான் ஆட்டத்தின் திருப்புமுனையாகவும், இந்திய அணியின் தோல்விக்கு காரணமாகவும் அமைந்தது என்றார் கவாஸ்கர்.