#AUSvsIND அதெல்லாம் கேட்கும்போது எனக்கு சிரிப்புதான் வந்துச்சு..! சதமடித்த மமதையில் ஸ்மித்
தான் ஃபார்மில் இல்லையென்று பேசப்பட்டதை கேட்டு சிரித்ததாக ஆஸி., அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2 சதங்கள் அடித்த ஸ்மித், முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் படுமோசமாக சொதப்பினார். 2 டெஸ்ட்டிலும்(4 இன்னிங்ஸ்கள்) சேர்த்தே மொத்தமாக வெறும் 10 ரன்கள் மட்டுமே அடித்தார். ஸ்மித்தின் சொதப்பலால் ஆஸி., அணி பாதிப்பை சந்தித்தது.
ஒருநாள் தொடரில் சதமடித்திருந்தபோதும் கூட, அதையெல்லாம் கருத்தில்கொள்ளாமல், முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் சரியாக ஆடாததால் அவரது ஃபார்ம் குறித்து விமர்சனங்கள் எழுந்தன. ஸ்மித்தை ரசிகர்கள் விமர்சிக்கவும் செய்தனர். அவரது ஃபார்ம் குறித்து ஊடகங்களிலும் எழுதப்பட்டன.
இந்நிலையில், சிட்னியில் நடந்துவரும் 3வது டெஸ்ட்டில் அபாரமாக ஆடிய ஸ்மித், முதல் இன்னிங்ஸில் சதமடித்தார்(131). 2வது இன்னிங்ஸிலும் சிறப்பாக ஆடிவருகிறார். 3ம் நாள் ஆட்ட முடிவில் 29 ரன்களுடன் களத்தில் உள்ளார். முதல் இன்னிங்ஸிலும் ஸ்மித்தின் சதத்தால் தான் ஆஸி., அணி 338 ரன்கள் அடித்தது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டீவ் ஸ்மித், தான் ஃபார்மில் இல்லை என்று பேசப்பட்டதை கேட்டு சிரித்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ஸ்மித், நான் ஃபார்மில் இல்லை என்று பலர் பேசியதை அறிவேன். அவர்களது கருத்துப்படி பார்க்கப்போனால், இப்போது நான் ஃபார்முக்கு வந்துவிட்டேன். 3-4 வாரங்களுக்கு முன்புதான் சிட்னியில் 2 சதம் அடித்தேன். ஆனாலும் நான் ஃபார்மில் இல்லை என்று பேசப்பட்டது எனக்கு சிரிப்பைத்தான் வரவழைத்தன. அந்த விமர்சனங்களை கேட்கும்போது சில சமயங்களில் சிரித்தேன் என்று தெரிவித்த ஸ்மித், சிறப்பாக ஆடியது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.