#AUSvsIND டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் அரைசதம் அடித்த கில்..! நங்கூரம் போட்ட புஜாரா - ரஹானே
ஆஸி.,க்கு எதிரான 3வது டெஸ்ட்டில் இந்திய அணியின் இளம் வீரர் ஷுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்துள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸி., அணி முதல் இன்னிங்ஸில் 338 ரன்கள் அடித்தது. முதல் 55 ஓவர்களில் வெறும் 2 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் அடித்திருந்த ஆஸி., அணி, 2ம் நாளான இன்றைய ஆட்டத்தில் அடுத்த 50 ஓவர்களில் எஞ்சிய அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் சேர்த்து மொத்தமாகவே 10 ரன்கள் அடித்து சொதப்பிய ஆஸி., அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் இந்த போட்டியில் சதமடித்தார். ஸ்மித் அதிகபட்சமாக 131 ரன்களும், லபுஷேன் 91 ரன்களும் அடித்தனர். இளம் தொடக்க வீரர் வில் புகோவ்ஸ்கி 62 ரன்கள் அடித்தார். இவர்களை தவிர மற்ற யாருமே சரியாக ஆடவில்லை. கேப்டன் டிம் பெய்ன், வார்னர், மேத்யூ வேட், க்றிஸ் கிரீன், பாட் கம்மின்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஸ்டார்க் 24 ரன்கள் அடித்தார். இதையடுத்து 338 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் சுருண்டது ஆஸி., அணி.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் அடித்துள்ளது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும் ஷுப்மன் கில்லும் இறங்கினர். இருவரும் நன்றாகவே தொடங்கினர். 77 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 26 ரன்கள் அடித்த ரோஹித் சர்மா, ஹேசில்வுட்டின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ஷுப்மன் கில்லுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிய கில், அரைசதம் அடித்தார். கடந்த டெஸ்ட்டில் அறிமுகமான கில், இந்த போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். ஆனால் அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் அரைசதம் அடித்த மாத்திரத்தில் ஐம்பது ரன்களுக்கே ஆட்டமிழந்தார்.
இதையடுத்து புஜாராவுடன் ரஹானே ஜோடி சேர்ந்து, 2ம் நாள் ஆட்டத்தை இருவரும் களத்தில் நின்று முடித்தனர். இருவருமே தலா 8 ஓவர்கள் பேட்டிங் ஆடி களத்தில் நிலைத்துவிட்ட நிலையில், 2ம் நாள் ஆட்டம் முடிந்தது.