- Home
- Sports
- Sports Cricket
- ஐபிஎல் வரலாற்றை மாற்றி எழுதிய ராஜஸ்தான் ராயல்ஸ்.. ரூ.15,300 கோடிக்கு விற்பனை.. புதிய ஓனர் யார் தெரியுமா?
ஐபிஎல் வரலாற்றை மாற்றி எழுதிய ராஜஸ்தான் ராயல்ஸ்.. ரூ.15,300 கோடிக்கு விற்பனை.. புதிய ஓனர் யார் தெரியுமா?
ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் ஒரு அணி விற்கப்பட்டதில் மிகப்பெரிய தொகையாகும். கடந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியின் 67% பங்குகளை டொரன்ட் குரூப் சுமார் ₹5,025 கோடிக்கு வாங்கியிருந்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விற்பனை
ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு மிகப்பெரிய தொகைக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விற்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க தொழிலதிபர் கல் சோமானி தலைமையிலான ஒரு கூட்டமைப்பு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 1.63 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.15,300 கோடி) வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. வால்மார்ட் குழுமத்தின் ராப் வால்டன், ஹாம்ப் குடும்பம் ஆகியோரின் ஆதரவுடன் சோமானி இந்த மெகா டீலை முடித்திருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் வரலாற்றிலேயே முதன்முறை
இந்த உரிமையாளர் மாற்றம், ஐபிஎல் 2026 சீசனுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் ஒரு அணி விற்கப்பட்டதில் மிகப்பெரிய தொகையாகும். கடந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியின் 67% பங்குகளை டொரன்ட் குரூப் சுமார் ₹5,025 கோடிக்கு வாங்கியிருந்தது. அந்த சாதனையை இப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் முறியடித்துள்ளது. தற்போதைக்கு, மனோஜ் பதாலே தலைமையிலான எமர்ஜிங் மீடியா குரூப் வசம்தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 65% பங்குகள் உள்ளன.
யார் இந்த கல் சோமானி?
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் தான் கல் சோமானி. கல்வி தொழில்நுட்பம் (Ed-Tech), செயற்கை நுண்ணறிவு (AI), விளையாட்டு தொழில்நுட்பம் என பல துறைகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இன்ட்ராஎட்ஜ் ட்ரூயோ, ட்ரூயோ ஏஐ (IntraEdge Truyo, Truyo AI) போன்ற நிறுவனங்களின் நிறுவனரும் இவர்தான். 2021-ல் இருந்தே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒரு சிறிய முதலீட்டை செய்திருந்த சோமானி, ஐபிஎல்-இன் வளர்ச்சியை கணித்துதான் இப்போது முழு பங்குகளையும் வாங்க முன்வந்துள்ளார்.
சிட்டி கோல்ஃப் கிளப் இணை உரிமையாளர்
விளையாட்டுத் துறையில், டெட்ராய்ட் நகரின் பிரபலமான கோல்ஃப் அணியான மோட்டார் சிட்டி கோல்ஃப் கிளப்பின் இணை உரிமையாளராகவும், TMRW ஸ்போர்ட்ஸ், TGL கோல்ஃப் லீக் போன்ற முயற்சிகளில் தொடக்க கால முதலீட்டாளராகவும் இருக்கிறார். கோல்ஃப் உலகின் ஜாம்பவான்களான டைகர் வுட்ஸ், ரோரி மெக்ல்ராய் ஆகியோர் இதில் சோமானியின் முதலீட்டாளர்கள்.
வாங்க போட்டியிட்ட இந்திய நிறுவனங்கள்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வாங்க ஆதித்யா பிர்லா குரூப், டைம்ஸ் குரூப் போன்ற பெரிய நிறுவனங்களும் போட்டியில் இருந்தன. கடந்த வாரம், ₹16,000 கோடி மதிப்பிலான ஒரு ஆஃபரை ராஜஸ்தான் அணி நிராகரித்ததாகவும் செய்திகள் வந்தன. இறுதியில், சோமானியின் கூட்டமைப்பு இந்த ஒப்பந்தத்தை உறுதி செய்துள்ளது. தற்போது ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இந்த சீசனில் சிறப்பாக விளையாடும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

