தம்பிங்களா நீங்க 2 பேருமே வேலைக்கு ஆகமாட்டீங்க போலவே..! ரஹானேவின் சதத்தால் தப்பிய மானம்
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா ஏ அணியின் சார்பில் கேப்டன் ரஹானே சிறப்பாக ஆடி சதமடித்தார்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடர் முடிந்து டி20 தொடர் நடந்துவருகிறது. இதைத்தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளது. டிசம்பர் 17ம் தேதி முதல் டெஸ்ட் தொடங்கவுள்ளது. இதற்கிடையே ரஹானே தலைமையிலான இந்தியா ஏ மற்றும் டிராவிஸ் ஹெட் தலைமையிலான ஆஸ்திரேலியா ஏ அணிகள் மோதும் 3 நாள் போட்டி சிட்னியில் நடந்துவருகிறது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா ஏ அணியின் தொடக்க வீரர்களாக இளம் வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் களமிறங்கிய நிலையில், இருவருமே சொல்லி வைத்தாற்போல டக் அவுட்டாகி வெளியேறினர். இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள பிரித்வி மற்றும் கில்லுக்கு இடையே ஆடும் லெவனில் இடம்பிடிக்க போட்டி நிலவும் நிலையில், இருவருமே டக் அவுட்டாகி வெளியேறினர்.
ரஹானே மற்றும் புஜாரா சிறப்பாக ஆடினர். அரைசதம் அடித்த புஜாரா 54 ரன்களுக்கு அவுட்டாக, மிகச்சிறப்பாக ஆடி சதமடித்த ரஹானே, 117 ரன்களுக்கு அவுட்டாக, இந்தியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் 93 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் ஆஸ்திரேலியா ஏ அணி, கேமரூன் க்ரீனின் அபார சதத்தால், 2ம் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் அடித்து, இந்திய அணியை விட 39 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 114 ரன்களுடன் கேமரூன் க்ரீன் களத்தில் உள்ளார். இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும் முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.