#AUSvsIND அடுத்த சவாலுக்கு தயார்.. நடராஜன் போட்ட ஃபோட்டோவால் ஆஸி., வீரர்கள் மிரட்சி; தமிழர்கள் குஷி
ஆஸி.,க்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் எடுக்கப்பட்டுள்ள இடது கை ஃபாஸ்ட் பவுலர் டி.நடராஜன், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் தயாராகிவிட்டார்.
ஐபிஎல் 13வது சீசனில் சிறப்பாக பந்துவீசியதன் விளைவாக ஆஸி., சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் நெட் பவுலராக ஆஸி.,க்கு அழைத்து செல்லப்பட்ட நடராஜன், வருண் சக்கரவர்த்தியின் காயத்தால் டி20 அணியில் இடம்பெற்றார். டி20 போட்டியில் அருமையாக பந்துவீசியதால், ஒருநாள் அணியில் இடம்பெற்று, ஒருநாள் போட்டிகளிலும் அபாரமாக பந்துவீசி அசத்தினார்.
டெஸ்ட் அணியின் நெட் பவுலராக இருந்த நடராஜன், 2வது டெஸ்ட்டில் உமேஷ் யாதவ் காயமடைந்து தொடரை விட்டு வெளியேறியதால், கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். 3வது டெஸ்ட் போட்டி வரும் 7ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
சிட்னி டெஸ்ட்டில் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோருடன் 3வது ஃபாஸ்ட் பவுலராக நவ்தீப் சைனி அல்லது நடராஜன் ஆகிய இருவரில் ஒருவர் இறங்குவார்கள். இவர்கள் இருவரில் யாருக்கு வாய்ப்பு என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில், இடது கை ஃபாஸ்ட் பவுலர் என்ற முறையில், நடராஜனுக்கான வாய்ப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அடுத்த சவாலுக்கு தயார் என்று நடராஜன் இந்திய டெஸ்ட் அணியின் ஜெர்சியை அணிந்து டுவிட்டரில் பகிர்ந்த புகைப்படம் செம வைரலாவதுடன், நடராஜன் தான் அடுத்த டெஸ்ட்டில் ஆடுவார் என்பதை பறைசாற்றும் விதமாக அந்த புகைப்படம் அமைந்துள்ளது.
முதல் தர கிரிக்கெட்டில் நடராஜனுக்கு அனுபவம் இல்லை என்றாலும், டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அபாரமாக பந்துவீசிய நடராஜனின் வெரைட்டியான பவுலிங்கால் ஆஸி., வீரர்கள் சற்றே அரண்டுதான் போயுள்ளார்கள். நடராஜன் இந்திய டெஸ்ட் அணி ஜெர்சியை அணிந்த புகைப்படத்தை கண்ட தமிழக ரசிகர்கள், நடராஜனுக்காக மகிழ்ச்சியடைந்துள்ளனர்.