#AUSvsIND இந்த டெஸ்ட் தொடர் முடிந்ததும் கேப்டன் பதவி மட்டுமல்ல; டீம்ல இடமும் காலி
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் முடிந்ததும், ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னுக்கு அணியில் கூட இடம் கிடைக்காது என்று முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 17ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. அந்த போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்கவுள்ளது. அதற்கடுத்த போட்டி மெல்போர்னிலும், 3வது போட்டி சிட்னியிலும் கடைசி போட்டி பிரிஸ்பேனிலும் நடக்கவுள்ளது.
கடந்த முறை ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்றபோது, ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக அந்த அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி சாதனை படைத்தது. இம்முறையும் டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி மீண்டும் டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ள நிலையில், அதற்கு இடம் கொடுக்கக்கூடாது என்ற முனைப்பில் ஆஸ்திரேலிய அணி உள்ளது.
ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இடையே எந்த மோதலும் இல்லாமல் சுமூக உறவுடனும் நட்புடனும் இரு அணி வீரர்களும் ஆடி முடித்தனர். டெஸ்ட் தொடரில் டிம் பெய்னை தவிர வேறு எந்த வீரரும் இந்திய வீரர்களுடன் மோத வாய்ப்பில்லை. ஆனால் அப்படி மோதாமல், ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்துவது அவருக்கு நல்லது என்று முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய முகமது கைஃப், ஐபிஎல்லில் ஆடுவதால் வார்னர், ஃபின்ச், கம்மின்ஸ் ஆகிய வீரர்கள் இந்திய வீரர்களுடன் மோதமாட்டார்கள். ஐபிஎல்லில் இதுவரை ஆடிராத, இனிமேலும் ஆட வாய்ப்பில்லாத ஆஸி., அணியின் கேப்டன் டிம் பெய்ன் தான் மோத முனைவார்.
ஆனால் ஸ்மித், வார்னர் தடை பெற்றதால் வேறு வழியில்லாமல் கேப்டனாக்கப்பட்ட டிம் பெய்ன், ரன்னே அடிக்காமல் இத்தனை காலம் ஓட்டிவருகிறார். இப்போது வார்னரும் ஸ்மித்தும் அணிக்கு திரும்பிவிட்டதால், இந்த தொடர் முடிந்ததும் டிம் பெய்ன் ஆஸ்திரேலிய அணியிலிருந்தே நீக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே அவரது இடத்தை தக்கவைக்க வேண்டுமென்றால், இந்திய வீரர்களுடன் மோதல் போக்கை கடைபிடிக்காமல் அவரது பேட்டிங் மற்றும் கீப்பிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்று கைஃப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.