#IPL2021 முக்கியமான 2 தலைகளை தூக்கி எறியும் கேகேஆர்..?
ஐபிஎல் 14வது சீசனில் கேகேஆர் அணி தினேஷ் கார்த்திக் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவரையும் கழட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் 13வது கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், அடுத்த சீசனில் 2 அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டால், மெகா ஏலமாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. ஆனால், 2 அணிகளை சேர்க்கும் முயற்சியை ஓராண்டுக்கு ஒத்திவைத்ததையடுத்து, 14வது சீசனுக்கான ஏலம் சிறிய ஏலமாகவே நடக்கவுள்ளது.
இந்நிலையில், கேகேஆர் அணி 2 பெரிய வீரர்களை கழட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் குல்தீப் யாதவ். 2018ம் ஆண்டு ஐபிஎல்லில் கேகேஆர் அணியில் இணைந்த தினேஷ் கார்த்திக், 2018 மற்றும் 2019 சீசன்களில் கேப்டனாக செயல்பட்டார். அவரது கேப்டன்சியில் 2018 சீசனில் பிளே ஆஃபிற்கு சென்ற கேகேஆர், 2019ல் பிளே ஆஃபிற்கு செல்லவில்லை. 2020 சீசனின் பாதியில் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டு இயன் மோர்கன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன் என எந்தவகையிலும் தினேஷ் கார்த்திக்கின் செயல்பாடு, கேகேஆருக்கு முழு திருப்தியை அளிக்கவில்லை. அதேபோல குல்தீப் யாதவின் செயல்பாடும் திருப்தியளிக்கும் வகையில் இல்லை. 2019 சீசனிலேயே நிறைய போட்டிகளில் ஆடும் லெவனில் சேர்க்கப்படவில்லை. 2020 ஐபிஎல்லிலும் குறைந்த போட்டிகளிலேயே ஆடினார். வருண் சக்கரவர்த்தி கேகேஆர் அணிக்காக கடந்த சீசனில் அசத்திவிட்டதால் குல்தீப் யாதவுக்கான அவசியம் இல்லாமல் போய்விட்டது.
மேலும் தற்போது கேகேஆரிடம் ரூ.8.5 கோடி இருப்பு உள்ள நிலையில், தினேஷ் கார்த்திக் மற்றும் குல்தீப் யாதவை கழட்டிவிடுவதன் மூலம் இருப்புத்தொகையை ரூ.21.7 கோடியாக அதிகரிக்கலாம். எனவே அந்த 2 பெரிய தலைகளையும் கழட்டிவிடும் முனைப்பில் உள்ளதாக தெரிகிறது.